செய்திகள்
எம்.ஜிஆருடன், ஜானகி அம்மாள்.

ஜானகி அம்மாள் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்- உறவினர்கள் கோரிக்கை

Published On 2020-12-01 02:44 GMT   |   Update On 2020-12-01 02:44 GMT
எம்.ஜி.ஆரின் மனைவியும், தமிழகத்தின் முதல் பெண் முதல்-அமைச்சருமான மறைந்த ஜானகி அம்மாளின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும் என்று முதல்-அமைச்சருக்கு அவரது உறவினர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர்.
சென்னை:

மறைந்த முதல்-அமைச்சர் ஜானகி அம்மாளின் தம்பி நாராயணனின் பேரன் வக்கீல் குமார் ராஜேந்திரன் கூறியதாவது:-

புரட்சி தலைவர் எம்.ஜி.ஆருக்கு அவரது இறுதி காலம் வரை பக்கப்பலமாக இருந்து ‘தோட்டத்தம்மா’ என்று எல்லோராலும் அன்புடன் அழைக்கப்பட்டவர் ஜானகி அம்மாள்.

1937-ம் ஆண்டு தன் திரைப்பட பயணத்தை தொடங்கிய இவர், 25-க்கும் மேற்பட்ட படங்களில் நடித்துள்ளார். எம்.ஜி.ஆருக்கு, திரைத்துறையிலும், அரசியலிலும் பக்கபலமாக இருந்தார். 1950-களில் சென்னை லாயிட்ஸ் ரோட்டில் ஒரு வீட்டில் எம்.ஜி.ஆரும், ஜானகி அம்மாளும் வசித்த நேரத்தில், ஜானகி அம்மாளின் உழைப்பில் வாங்கப்பட்டது தான் தற்போது அ.தி.மு.க. தலைமை அலுவலகமாக உள்ளது.

இந்த இடத்தை மகிழ்ச்சியோடு கட்சிக்காக எழுதி கொடுத்தார். எம்.ஜி.ஆர். மறைவுக்கு பிறகு 24 நாட்கள் முதல்-அமைச்சராக இருந்தார். தமிழக அரசியலில் முதல் பெண் முதல்-அமைச்சர் அவர்தான். 1996-ம் ஆண்டு மே 19-ந்தேதி தனது 73-வது வயதில் அவர் காலமானார். முதல் பெண் முதல்-அமைச்சர் என்ற வகையில் அவரின் பிறந்தநாளை அரசு விழாவாக கொண்டாட வேண்டும்.

அவருடைய 97-வது பிறந்தநாளான இன்று (நேற்று) தமிழக முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமிக்கு கோரிக்கை விடுக்கிறோம். இது சம்பந்தமாக ஏற்கனவே அவரை நேரில் சந்தித்து கோரிக்கை விடுத்து இருக்கிறோம்.

மேற்கண்டவாறு அவர் கூறியுள்ளார்.
Tags:    

Similar News