செய்திகள்
சத்யபிரத சாகு

மாவட்ட கலெக்டர்களுடன் தலைமை தேர்தல் அதிகாரி ஆலோசனை

Published On 2020-12-01 01:21 GMT   |   Update On 2020-12-01 01:21 GMT
வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் உள்ள முன்னேற்றம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.
சென்னை:

வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் உள்ள முன்னேற்றம் தொடர்பாக தமிழக தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று மாவட்ட கலெக்டர்களுடன் காணொலி காட்சி மூலம் ஆலோசனை நடத்தினார்.

வரும் ஜனவரி 1-ந்தேதியை வாக்காளராகும் நாளாக (18 வயது முடிப்பவர்கள்) கணக்கிட்டு, வாக்காளர் பட்டியல் சிறப்பு சுருக்கமுறை திருத்தப்பணியை மேற்கொள்ள, மாநில தலைமை தேர்தல் அதிகாரிக்கு இந்திய தேர்தல் ஆணையம் உத்தரவிட்டு உள்ளது.

அதன்படி, கடந்த மாதம் (நவம்பர்) 16-ந்தேதி ஒருங்கிணைந்த வரைவு வாக்காளர் பட்டியல் வெளியிடப்பட்டது.

வாக்காளர்கள், தங்கள் பெயர் விவரங்களை அதில் சரிபார்க்க வேண்டும். பெயர் சேர்ப்பது, ஆட்சேபனை தெரிவிப்பது போன்றவற்றுக்கு வருகிற 15-ந்தேதி வரை காலஅவகாசம் அளிக்கப்பட்டு உள்ளது. இதுதொடர்பாக அளிக்கப்படும் விண்ணப்பங்கள் அனைத்தும் வரும் ஜனவரி 5-ந்தேதி இறுதி செய்யப்படும். பின்னர் இறுதி வாக்காளர் பட்டியல் வெளியிடப்படும்.

நவம்பர் 16-ந்தேதி முதல் டிசம்பர் 15-ந்தேதிக்கு இடைப்பட்ட காலகட்டத்தில், வாக்காளர் பட்டியலில் பெயர் சேர்க்க விரும்பும் தகுதியுடைய வாக்காளர்கள், பெயரை நீக்க விரும்புவோர், திருத்த விரும்புவோர், இடமாற்றம் விரும்புவோர் அதற்கான விண்ணப்பங்களை (6, 7, 8, 8ஏ) அளிக்க வேண்டும்.

நேரடியாகவோ, ஆன்லைன் மூலமாகவோ விண்ணப்பிக்கலாம். அதோடு விண்ணப்பங்களை பெறுவதற்காக சிறப்பு முகாம்களையும் தேர்தல் ஆணையம் நடத்துகிறது. ஏற்கனவே 2 சிறப்பு முகாம்கள் நடத்தி முடிக்கப்பட்டு உள்ளன.

இந்தநிலையில், வாக்காளர் பட்டியல் திருத்தப்பணிகளில் உள்ள முன்னேற்றம் குறித்து மாவட்ட தேர்தல் அதிகாரிகளுடன் (மாவட்ட கலெக்டர்கள்) தலைமை தேர்தல் அதிகாரி சத்யபிரத சாகு நேற்று ஆலோசனை மேற்கொண்டார்.

புதிய வாக்காளர்களை சேர்த்தல், இரட்டை பெயர் பதிவுகள், இறந்த வாக்காளர் பெயர் ஆகியவற்றை நீக்குதல் போன்ற முக்கிய பணிகள் மாவட்ட அளவில் எந்த அளவில் செய்யப்படுகிறது என்பது பற்றி அவர் கேட்டறிந்தார்.

சென்னை தலைமைச்செயலகத்தில் நேற்று மாலை 4 மணிக்கு தொடங்கிய இந்த கூட்டம், காணொலி காட்சி மூலம் நடந்தது.
Tags:    

Similar News