செய்திகள்
நீதிமன்றம்

நிலத்தகராறில் தொழிலாளியை கொலை செய்த வழக்கில் அண்ணன்- தம்பிக்கு ஆயுள் தண்டனை

Published On 2020-11-28 07:29 GMT   |   Update On 2020-11-28 07:29 GMT
நிலத்தகராறில் தொழிலாளியை வெட்டி கொலை செய்த வழக்கில் அண்ணன்-தம்பிக்கு ஆயுள் தண்டனை விதித்து தாராபுரம் கோர்ட்டு தீர்ப்பு கூறியது.
தாராபுரம்:

திருப்பூர் மாவட்டம் குண்டடம் அருகே உள்ள கணக்கம்பட்டி ஆதிதிராவிடர் காலனியை சேர்ந்தவர் பாலன் (வயது 40). கூலித்தொழிலாளி. அதே பகுதியை சேர்ந்தவர் முருகன் (53). இவருடைய தம்பி தண்டபாணி (48). கூலித்தொழிலாளியான இவர்களுக்கும் பாலனுக்கும் இடையே நிலத்தகராறு இருந்து வந்தது.

இந்த நிலையில் கடந்த 30.4.2016 அன்று மாணிக்கம்பட்டி பிரிவு அருகே நடந்து சென்று கொண்டிருந்த பாலன் வெட்டிக்கொலை செய்யப்பட்டார். இந்த கொலை தொடர்பாக குண்டடம் போலீசார் வழக்குப்பதிவு செய்து முருகன் மற்றும் தண்டபாணியை கைது செய்து கோவை மத்திய சிறையில் அடைத்தனர். அதன்பின்னர் மாவட்ட போலீஸ் சூப்பிரண்டு பரிந்துரையின் பேரில் அண்ணன், தம்பி இருவரும் குண்டர் சட்டத்தில் கைது செய்யப்பட்டனர்.

மேலும் இவர்கள் மீதான கொலை வழக்கு தாராபுரம் கூடுதல் மாவட்ட அமர்வு நீதி மன்றத்தில் நடந்து வந்தது. இந்த வழக்கை நீதிபதி பி.கருணாநிதி விசாரித்தார். விசாரணை முடிந்த நிலையில் நேற்று தீர்ப்பு கூறப்பட்டது.

அதன்படி குற்றம் சாட்டப்பட்ட முருகன், தண்டபாணிக்கு ஆயுள் தண்டனையும், தலா ரூ.10 ஆயிரம் அபராதம் விதித்து நீதிபதி தீர்ப்பு கூறினார். அபராதம் கட்ட தவறினால் மேலும் 6 மாதம் சிறை தண்டனை அனுபவிக்க வேண்டும் என்று தீர்ப்பளித்தார். இந்த வழக்கில் அரசு வக்கீல் என்.ஆனந்தன் ஆஜராகி வாதாடினார்.

இதனை தொடர்ந்து அண்ணன், தம்பி இருவரையும் போலீசார் பலத்த பாதுகாப்புடன் அழைத்து சென்று கோவை மத்திய சிறையில் அடைத்தனர்.
Tags:    

Similar News