செய்திகள்
விபத்து

வாசுதேவநல்லூர் அருகே பஸ் மோதி பள்ளிக்கூட ஆசிரியர் பலி

Published On 2020-11-27 10:07 GMT   |   Update On 2020-11-27 10:07 GMT
வாசுதேவநல்லூர் அருகே பஸ் மோதிய விபத்தில் பள்ளிக்கூட ஆசிரியர் பரிதாபமாக உயிரிழந்தார். விபத்து தொடர்பாக பஸ் டிரைவரை போலீசார் கைது செய்தனர்.
வாசுதேவநல்லூர்:

சிவகிரி அருகே ராயகிரி காந்தி தெருவை சேர்ந்தவர் ஆபிரகாம் செல்வராஜ் (வயது 55). இவர் ஒரு தனியார் மேல்நிலைப்பள்ளியில் ஆசிரியராக பணியாற்றி வந்தார். ஆபிரகாம் செல்வராஜ் வாசுதேவநல்லூரில் உள்ள உறவினர் திருமண நிகழ்ச்சிக்கு சென்று விட்டு மோட்டார் சைக்கிளில் தனது மகள் ஆக்சிலிய வைஸ்லின் (9) உடன் வீட்டிற்கு சென்று கொண்டிருந்தார். வாசுதேவநல்லூர் அருகே ராஜபாளையம் தேசிய நெடுஞ்சாலையில் உள்ள அருளாச்சி ஒத்தக்கடை விலக்கில் மோட்டார் சைக்கிள் திரும்பிய போது, அந்த வழியாக தென்காசியில் இருந்து மதுரைக்கு அரசு பஸ் வந்தது. கண் இமைக்கும் நேரத்தில் பஸ், மோட்டார் சைக்கிள் மீது மோதியதாக கூறப்படுகிறது.

இதில் ஆபிரகாம் செல்வராஜ், ஆக்சிலிய வைஸ்லின் ஆகியோர் தூக்கி வீசப்பட்டு படுகாயம் அடைந்தனர். அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக சிவகிரி அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். ஆனால் செல்லும் வழியிலேயே ஆபிரகாம் செல்வராஜ் பரிதாபமாக இறந்தார். ஆக்சிலிய வைஸ்லினுக்கு தீவிர சிகிச்சை அளிக்கப்பட்டு வருகிறது. இதுகுறித்து வாசுதேவநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து அரசு பஸ் டிரைவர் அலங்காநல்லூர் குறவன்குளம் நடுத்தெருவைச் சேர்ந்த திருஞானம் (38) என்பவரை கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
Tags:    

Similar News