செய்திகள்
பல்லடம் அருகே குடிநீர் வழங்கக்கோரி காலிக்குடங்களுடன் பெண்கள் சாலை மறியல்
பல்லடம் அருகே உள்ள மாதப்பூரில் குடிநீர் வழங்கக்கோரி காலி குடங்களுடன் பெண்கள் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர்.
பல்லடம்:
பல்லடம் அருகே உள்ளது மாதப்பூர். இங்கு 500-க்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். இங்கு கடந்த 20 நாட்களாக குடிநீர் வரவில்லை. இது குறித்து ஊராட்சி நிர்வாகத்திடம் முறையிட்டும் குடிநீர் வழங்கப்படவில்லை.
இதனால் ஆத்திரமடைந்த அப்பகுதி பெண்கள் உள்ளிட்டவர்கள், நேற்று காலை காலிக்குடங்களுடன் கோவை -திருச்சி மெயின் ரோட்டில் சாலை மறியல் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதன் காரணமாக அந்த பகுதியில் போக்குவரத்து பாதிப்புஏற்பட்டது.
இது பற்றிய தகவல் அறிந்ததும் சம்பவ இடத்துக்கு திருப்பூர் மாவட்ட கூடுதல் போலீஸ் சூப்பிரண்டு ஸ்ரேயா மற்றும் பல்லடம் போலீசார் விரைந்து வந்தனர். அவர்கள் மறியல்போராட்டத்தில் ஈடுபட்ட பொதுமக்களிடம் சமரச பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது மறியலில் ஈடுபட்டவர்கள், எங்களுக்கு குடிநீர் வேண்டும், குடிக்க தண்ணீர் இல்லாமல் என்ன செய்வது, இதுதொடர்பாக சம்பந்தப்பட்ட அதிகாரிகளிடம் முறையிட்டும் நடவடிக்கை இல்லை என்று கூறி பொதுமக்கள் வாக்குவாதத்தில் ஈடுபட்டனர்.
ஊராட்சி மன்ற அலுவலகத்திற்கு வாருங்கள் பேசி தீர்வு காணலாம் என்று போலீசார் கூறினார். இதையடுத்து பொதுமக்கள் மறியலை கைவிட்டனர். மறியல் காரணமாக கோவை-திருச்சி மெயின் ரோட்டில் சிறிதுநேரம் போக்குவரத்து தடைபட்டது.
இதைத்தொடர்ந்து ஊராட்சி மன்ற அலுவலகத்தில் பேச்சுவார்த்தை நடத்தப்பட்டது. அப்போது ஊராட்சிதலைவர் அசோகன் பேசுகையில், மாதப்பூர் ஊராட்சியில் மொத்தம் ஆயிரத்திற்கும் மேற்பட்ட குடிநீர் இணைப்புகள் உள்ளன. ஒரு லட்சம் லிட்டர் வரவேண்டிய தண்ணீர் 60 ஆயிரம் லிட்டர் மட்டுமே வருகிறது. இதனால் குடிநீர் பற்றாக்குறை ஏற்பட்டுள்ளது. நிலத்தடி நீரும் வற்றிவிட்டதால் முழுக்க முழுக்கஅத்திக்கடவு குடிநீர் திட்டத்தையே நம்பியுள்ளது. எனவே அதிகாரிகளிடம் பேசிகூடுதலாக தண்ணீர் கேட்டு விரைவில் பொதுமக்களுக்கு வழங்கப்படும் என்றார்.
இதனை ஏற்றுக்கொண்டு பொதுமக்கள் கலைந்து சென்றனர். குடிநீர் கேட்டு பொதுமக்கள் காலிக்குடங்களுடன் சாலை மறியல் செய்த சம்பவம் பல்லடம் பகுதியில்பரபரப்பை ஏற்படுத்தியது