செய்திகள்
கைது

பித்தளை நகைகளுக்கு தங்க முலாம் பூசி விற்ற பெண் உள்பட 3 பேர் கைது

Published On 2020-11-23 02:56 GMT   |   Update On 2020-11-23 02:56 GMT
சூலூர் அருகே பித்தளை நகைகளுக்கு தங்க முலாம் பூசி விற்ற பெண் உள்பட 3 பேர் கைது செய்யப்பட்டனர்.
சூலூர்:

கோவையை அடுத்த சூலூர் அருகே ஒரு தோட்டத்தில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி, ஒரு கும்பல் பித்தளை நகைகள் மீது தங்கமுலாம் பூசி விற்பனை செய்வதாக சூலூர் போலீசாருக்கு ரகசிய தகவல் கிடைத்தது. அதன்பேரில் கருமத்தம்பட்டி போலீஸ் துணை சூப்பிரண்டு சூரியமூர்த்தி உத்தரவின்பேரில், சூலூர் சப்-இன்ஸ்பெக்டர் முருகன் மற்றும் போலீசார் சூலூரை அடுத்த பாப்பம்பட்டி பகுதியில் தீவிர விசாரணை நடத்தினர்.

அப்போது அங்குள்ள ஒரு தோட்ட பகுதியில் ஒரு பெண் உள்பட 3 பேர் வசித்து வருவதும், அவர்கள் ஆந்திர மாநிலத்தை சேர்ந்தவர்கள் என்பதும் தெரிய வந்தது. உடனே போலீசார் அவர்கள் வசித்த வீட்டை சுற்றி வளைத்தனர். இதை அறிந்த அவர்கள் அங்கிருந்து தப்பி ஓட முயன்றனர். உடனே போலீசார் சமயோசிதமாக செயல்பட்டு, அந்த கும்பலை சேர்ந்த 3 பேரையும் சுற்றிவளைத்து மடக்கி பிடித்தனர்.

விசாரணையில் அவர்கள் 3 பேரும் ஆந்திர மாநிலத்தை சேர்ந்த உபதுல்லா சீனிவாஸ், அவருடைய மனைவி உபதுல்லா ரமணா மற்றும் பட்டா சுரேஷ் என்பதும், அவர்கள் ,கோவை மாவட்டத்தில் பல பகுதிகளில் பித்தளை நகைகள் மீது தங்க முலாம் பூசி விற்றும், அடகு வைத்தும் மோசடி செய்ததும் தெரியவந்தது.இது குறித்து சூலூர் போலீசார் வழக்கு பதிவு செய்து, அவர்கள் 3 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து 4 பவுன் தங்க நகை பறிமுதல் செய்யப்பட்டது. கைதான 3 பேரும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்டு கோவை மத்திய சிறையில் அடைக்கப்பட்டனர்.

போலீசாரின் தொடர் விசாரணையில், கைதான 3 பேரின் கூட்டாளிகள் சிலர் ஆந்திராவில் பதுங்கி இருப்பது உறுதியானது.

இதைத்தொடர்ந்து அவர்களின் கூட்டாளிகளை பிடிக்க சூலூர் போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் பாண்டிராஜ் தலைமையிலான தனிப்படை போலீசார் ஆந்திரா விரைந்துள்ளதாக போலீசார் தெரிவித்தனர்.
Tags:    

Similar News