செய்திகள்
கலெக்டர் அரவிந்த்

குறு, சிறு தொழில்களுக்கு கடன் உதவி- கலெக்டர் தகவல்

Published On 2020-11-20 03:53 GMT   |   Update On 2020-11-20 03:53 GMT
குறு, சிறு தொழில்களுக்கு கடன் உதவி வழங்கப்பட உள்ளதாக கலெக்டர் அரவிந்த் தெரிவித்துள்ளார்.
நாகர்கோவில்:

குமரி மாவட்ட கலெக்டர் அரவிந்த் வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறியிருப்பதாவது:-

தமிழ்நாடு தொழில் முதலீட்டு கழகம் மாநில அளவில் செயல்பட்டு வரும் ஒரு நிதிக் கழகம் ஆகும். இது தமிழ்நாடு அரசு நிறுவனம். 1949-ம் ஆண்டு தொடங்கப்பட்ட இக்கழகம் மாநில அரசின் ஆதரவுடன் இதுவரை எண்ணற்ற தொழிற்சாலைகளுக்கு கடனுதவி வழங்கி தொழில் வளர்ச்சிக்கு முன்னோடியாக திகழ்கிறது.

குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில் பிரிவுகளுக்கு புதிய தொழிற்சாலைகளை நிறுவுவதற்கும் தற்போது இயங்கி கொண்டிருக்கும் பிரிவுகளை விரிவுபடுத்துவதற்கும், உற்பத்தியை பன்முகப்படுத்துவதற்கும் பல்வேறு சிறப்பு திட்டத்தின் கீழ்கடன் உதவி வழங்கி வருகிறது.

நாகர்கோவில் கிளை அலுவலகத்தில் குறு, சிறு மற்றும் நடுத்தர தொழில்களுக்கான சிறப்பு தொழில் கடன் மேளா வருகிற 30-ந் தேதி வரை நடக்கிறது. கடன் மேளாவில் டி.ஐ.ஐ.சி.யின் பல்வேறு திட்டங்களின் சிறப்பு அம்சங்கள் மத்திய, மாநில அரசுகளின் மானியங்கள் (மூலதன மானியம், 6 விழுக்காடு வட்டிமானியம் மற்றும் இதர மானியங்கள்) புதிய தொழில் முனைவோர் மற்றும் தொழில் நிறுவன மேம்பாட்டு திட்டம் போன்றவை குறித்த விரிவான விளக்கங்கள் தரப்படுகிறது. தகுதிபெறும் தொழில்களுக்கு தமிழக அரசின் 25 சதவீத முதலீட்டு மானியம் ரூ.50 லட்சம் வரை வழங்கப்படும்.

இந்த முகாம் காலத்தில் சமர்ப்பிக்கப்படும் கடன் விண்ணப்பங்களுக்கு ஆய்வு கட்டணத்தில் 50 விழுக்காடு சலுகை அளிக்கப்படும். இந்த அரியவாய்ப்பை தொழில் முனைவோர், தொழிலதிபர்கள் பயன்படுத்தி கொள்ளலாம். மேலும் விவரங்களுக்கு நாகர்கோவில் கிளை மேலாளரை தொடர்பு கொள்ளலாம்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News