செய்திகள்
வீடு புகுந்து கொள்ளை

அவினாசி அருகே டிரைவரின் வீட்டில் பூட்டை உடைத்து நகை, பணம் திருட்டு

Published On 2020-11-17 08:46 GMT   |   Update On 2020-11-17 08:46 GMT
அவினாசி அருகே டிரைவரின் வீட்டில் பூட்டை உடைத்து நகை மற்றும் பணத்தை மர்ம ஆசாமிகள் திருடி சென்று விட்டனர்.
சேவூர்:

தர்மபுரி மாவட்டம் அரூரை சேர்ந்தவர் சங்கர் (வயது 43). இவர் அவினாசி அருகே தெக்கலூர் டீச்சர் காலனியில் குடும்பத்துடன் குடியிருந்து ஒரு பனியன் நிறுவனத்தில் டிரைவராக வேலை செய்து வருகிறார்.

இந்த நிலையில் தீபாவளியை கொண்டாட வீட்டை பூட்டி விட்டு, சங்கர் தனது குடும்பத்துடன் சொந்த ஊராக அரூருக்கு சென்று விட்டார். தீபாவளி முடிந்து பிறகு நேற்று திரும்பி வந்து பார்த்தபோது, வீட்டின் கதவு பூட்டு உடைக்கப்பட்டிருந்தது கண்டு அதிர்ச்சி அடைந்தார்.

இதையடுத்து, வீட்டிற்குள் சென்று பார்த்தபோது, வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதிலிருந்த ஒரு பவுன்நகை, மடிக்கணினி, செல்போன், ரூ. 25 ஆயிரம் உள்ளிட்டவற்றை மர்ம ஆசாமிகள் திருடிச் சென்றது தெரியவந்தது. இது குறித்து, அவினாசி போலீசார் வழக்குப் பதிவு செய்து விசாரிக்கின்றனர்.

இதே போல் கேரளாவை சேர்ந்தவர் சுவைபு(35). இவருடைய மனைவி ரமீலா(28). சுவைபு தனது குடும்பத்துடன் பல்லடம் மகாலட்சுமி நகர் 6-வது பகுதியில் வாடகைக்கு வீடு எடுத்து தங்கி பனியன் தொழிலாளியாக வேலை பார்த்து வருகிறார். இந்த நிலையில் தீபாவளி விடுமுறைக்காக கேரளாவில் உள்ள சொந்த ஊருக்கு சென்று விட்டார். விடுமுறை முடிந்து நேற்று மகாலட்சுமி நகர் வந்தார்.

அப்போது வீட்டின் பூட்டு உடைக்கப்பட்டு இருப்பதை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பின்னர் உள்ளே சென்று பார்த்தபோது வீட்டில் இருந்த பீரோ உடைக்கப்பட்டு அதில் இருந்த துணிமணிகள் மற்றும் பொருட்கள் சிதறிக்கிடந்தன. மேலும் பீரோவில் இருந்த நகை-பணம் திருட்டு போய் இருந்தது. இதுகுறித்து பல்லடம் போலீசாருக்கு புகார் கொடுத்தார். சம்பவ இடத்திற்கு வந்த போலீசார் திருட்டு போனது நகை மற்றும் பணம் எவ்வளவு என்பது குறித்து விசாரணை செய்து வருகின்றனர்.
Tags:    

Similar News