செய்திகள்
ஒகேனக்கல் காவிரி ஆற்றில் பாறைகளுக்கு இடையே பரிசலில் சென்ற சுற்றுலா பயணிகள்

ஒகேனக்கல்லில் குவிந்த சுற்றுலா பயணிகள்

Published On 2020-11-16 03:21 GMT   |   Update On 2020-11-16 03:21 GMT
விடுமுறை நாளையொட்டி நேற்று ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்தனர். அவர்கள் காவிரி ஆற்றில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்ந்தனர்.
பென்னாகரம்:

சுற்றுலா தலமான தர்மபுரி மாவட்டம் ஒகேனக்கல்லுக்கு கர்நாடகம், ஆந்திரா, கேரளா உள்ளிட்ட பல்வேறு மாநிலங்களில் இருந்தும் தமிழகத்தின் பல்வேறு மாவட்டங்களில் இருந்தும் ஏராளமான சுற்றுலா பயணிகள் வந்து செல்கிறார்கள். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு அருவியில் குளித்தும், பரிசலில் சென்றும் மகிழ்வார்கள். கர்நாடக-தமிழக காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் பெய்த கனமழையின் காரணமாக ஒகேனக்கல்லுக்கு நீர்வரத்து அதிகரிப்பதும், குறைவதுமாக உள்ளது.

இந்த நிலையில் காவிரி நீர்ப்பிடிப்பு பகுதிகளில் மீண்டும் கனமழை பெய்ததால் நேற்று முன்தினம் ஒகேனக்கல்லுக்கு வினாடிக்கு 7 ஆயிரம் கனஅடி தண்ணீர் வந்தது. கனமழை காரணமாக இந்த நீர்வரத்து படிப்படியாக அதிகரித்து நேற்று வினாடிக்கு 9 ஆயிரம் கனஅடி வந்தது. இந்த நீர்வரத்தை காவிரி நுழைவிடமான கர்நாடக-தமிழக மாநில எல்லையான பிலிகுண்டுலுவில் மத்திய நீர்வளத்துறை அதிகாரிகள் அளந்து கண்காணித்து வருகின்றனர்.

இந்த நிலையில் விடுமுறை நாளையொட்டி நேற்று ஏராளமான சுற்றுலா பயணிகள் ஒகேனக்கல்லில் குவிந்தனர். அவர்கள் எண்ணெய் மசாஜ் செய்து கொண்டு காவிரி ஆற்றில் பல்வேறு இடங்களில் குளித்தனர். பின்னர் அவர்கள் குடும்பத்தினர், நண்பர்களுடன் பாதுகாப்பு உடை அணிந்து பாறைகளுக்கிடையே காவிரி ஆற்றில் பரிசலில் சென்று மகிழ்ந்தனர்.

மேலும் சுற்றுலா பயணிகள் தொங்கு பாலத்தில் நின்றவாறு காவிரி ஆற்றின் அழகை கண்டு ரசித்தனர். இளைஞர்கள் ஐந்தருவி பகுதிக்கு சென்று செல்பி எடுத்து மகிழ்ந்தனர். சுற்றுலா பயணிகள் வருகை அதிகரிப்பால் கடைகள், உணவகங்கள், மீன் மார்க்கெட்டுகளில் விற்பனை விறுவிறுப்பாக நடைபெற்றது. ஒகேனக்கல்லில் சுற்றுலா பயணிகள் குவிந்ததால் போலீசார் ஆலாம்பாடி, மணல்திட்டு, மெயின் அருவி, பரிசல் துறை உள்ளிட்ட பகுதிகளில் தீவிர ரோந்து சென்று கண்காணித்தனர்.
Tags:    

Similar News