செய்திகள்
காட்டுயானை மிதித்து இறந்த மயில்தாய்.

தேவாரத்தில் காட்டுயானை மிதித்து ஆடு மேய்க்க சென்ற பெண் மரணம்

Published On 2020-11-10 10:07 GMT   |   Update On 2020-11-10 10:07 GMT
தேவாரம் மலையடிவாரத்தில் காட்டுயானை மிதித்து ஆடு மேய்க்க சென்ற பெண் பரிதாபமாக இறந்தார். தொடர் உயிர் பலியால் விவசாயிகள் அச்சம் அடைந்துள்ளனர்.
தேவாரம்:

தேனி மாவட்டம், தேவாரம் மூனாண்டிபட்டியை சேர்ந்தவர் மாயாண்டி. இவருடைய மகள் மயில்தாய் (வயது 57). இவருக்கு திருமணமாகவில்லை. அவர் வீட்டில் ஆடுகளை வளர்க்கும் தொழிலில் ஈடுபட்டு வந்தார். தினமும் அவர் 18-ம்படி திருவன்தள்ளி மலையடிவாரத்தையொட்டி உள்ள பகுதிக்கு ஆடுகளை மேய்ச்சலுக்கு அழைத்து செல்வது வழக்கம்.

இந்த நிலையில் நேற்று அதிகாலையில் மயில்தாய் ஆடுகளை மேய்ச்சலுக்கு கொண்டு சென்றார். எள்ளுப்பாறை பகுதியில் ஆடுகளை மேயவிட்டிருந்தார். அப்போது ஒற்றை காட்டுயானை அங்கு வந்தது. அதனை பார்த்தவுடன் மயில்தாய் அதிர்ச்சி அடைந்தார். உடனே உயிரை கையில் பிடித்துக்கொண்டு ஓடினார்.

அந்த காட்டுயானை சுமார் 200 மீட்டர் தூரம் அவரை துரத்தியது. மேய்ந்து கொண்டிருந்த ஆடுகளும் யானையின் பிளிறல் சத்தம் கேட்டு மிரண்டு போய் அங்குமிங்கும் ஓடியது. ஒரு கட்டத்தில் அந்த யானை மயில்தாயை தும்பிக்கையால் தூக்கி வீசியது. பின்னர் அவரை காலால் மிதித்தது. இதில் படுகாயமடைந்த மயில்தாய் சம்பவ இடத்திலேயே பரிதாபமாக இறந்தார்.

மாலையில் மேய்ச்சலுக்கு சென்ற ஆடுகள் கொட்டகைக்கு திரும்பியது. வெகுநேரமாகியும் வீட்டிற்கு மயில்தாய் வராததால் உறவினர்கள் மற்றும் அப்பகுதி மக்கள் சந்தேகமடைந்து மலையடிவார பகுதிக்கு தேடி சென்றனர். அங்கு ஒற்றை காட்டு யானை நின்று கொண்டிருந்தது. அதனை வெடி வைத்து வனப்பகுதிக்குள் பொதுமக்கள் விரட்டினர். பின்னர் அந்த பகுதியில் யானை மிதித்து மயில்தாய் இறந்து கிடப்பதை பார்த்து அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து வனத்துறையினருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது. அதன்பேரில் உத்தமபாளையம் தாசில்தார் உதயராணி, உதவி வனபாதுகாவலர் மகேந்திரன், போலீஸ் இன்ஸ்பெக்டர் ராமகிருஷ்ணன் ஆகியோர் சம்பவ இடத்திற்கு வந்து விசாரணை நடத்தினர். பின்பு மயில்தாயின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக தேனி அரசு மருத்துவ கல்லூரி மருத்துவமனைக்கு போலீசார் அனுப்பினர்.

இந்த சம்பவத்தால் அப்பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.
Tags:    

Similar News