செய்திகள்
பலி

அமராவதி ஆற்றில் மூழ்கி மகனுடன் டாக்டர் பலி

Published On 2020-10-31 04:04 GMT   |   Update On 2020-10-31 04:04 GMT
மடத்துக்குளம் அருகே அமராவதி ஆற்றில் மூழ்கி மகனுடன் டாக்டர் பலியான சம்பவம் தொடர்பாக போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
மடத்துக்குளம்:

திருப்பூர் மாவட்டம் மடத்துக்குளத்தை அடுத்த ஜோத்தம்பட்டி அவனலிங்கம்பிள்ளை வீதியை சேர்ந்தவர் டாக்டர் ஜோதிலிங்கம் (வயது 42). இவருடைய மனைவி கவிதா (32). இவர்களது மகள் ஸ்ரீனிகா (14), மகன் சர்வேஸ்வரன் (11).

ஜோதிலிங்கம் சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வந்தார். இதனால் குடும்பத்துடன் சென்னை குரோம்பேட்டையில் வசித்து வந்தார். ஸ்ரீனிகா அங்குள்ள தனியார் பள்ளியில் 9-ம் வகுப்பு படித்து வருகிறாள். சர்வேஸ்வரன் 6-ம் படித்து வந்தான்.

ஜோதிலிங்கத்தின் சொந்த ஊரான ஜோத்தம்பட்டி அருகே கடத்தூரில் அமராவதி ஆற்றங்கரையில் அர்சுனேஸ்வரர் கோவில் உள்ளது. இந்த கோவிலில் ஜோதிலிங்கம் தனது குடும்பத்துடன் சாமி தரிசனம் செய்ய வந்தனர்.

முன்னதாக அமராவதி ஆற்றில் குளிக்க ஜோதிலிங்கம் முடிவு செய்தார். அதன்படி ஜோதிலிங்கம், கவிதா, ஸ்ரீனிகா மற்றும் சர்வேஸ்வரன் ஆகியோர் அமராவதி ஆற்றுக்கு சென்றனர். கரையில் கவிதாவும், ஸ்ரீனிகாவும் நின்றுகொண்டனர். ஜோதிலிங்கமும், சர்வேஸ்வரனும் குளிப்பதற்கு ஆற்றுக்குள் இறங்கினர். அப்போது தந்தையும், மகனும் ஆற்றின் ஆழமான பகுதிக்கு சென்று தண்ணீருக்குள் மூழ்கினர். இதையடுத்து கரையில் நின்று கொண்டிருந்த கவிதாவும், ஸ்ரீனிகாவும் பதற்றம் அடைந்து அருகில் நின்றுகொண்டிருந்தவர்களை உதவிக்கு அழைத்தனர். உடனே அவர்களும் ஓடிவந்து ஆற்றுக்குள் இறங்கி தந்தை-மகனை தேடினர். ஆனால் அவர்களை கண்டுபிடிக்க முடியவில்லை. இதுகுறித்து அறிந்த தீயணைப்பு வீரர்கள் விரைந்து சென்று ஆற்றுக்குள் இறங்கி தந்தை-மகன் உடல்களை மீட்டு வெளியே கொண்டு வந்தனர்.

இந்த சம்பவம் குறித்து மடத்துக்குளம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News