செய்திகள்
தற்கொலை

காதலி இறந்த துக்கத்தில் தீக்குளித்து டிரைவர் தற்கொலை

Published On 2020-10-28 02:46 GMT   |   Update On 2020-10-28 02:46 GMT
தஞ்சை அருகே காதலி இறந்த துக்கத்தில் தீக்குளித்து டிரைவர் தற்கொலை செய்து கொண்டார்.
கள்ளப்பெரம்பூர்:

தஞ்சை அருகே உள்ள களிமேடு பகுதியை சேர்ந்தவர் மணிகண்டன் (வயது21). டிரைவர். இவர் பெண் ஒருவரை காதலித்து வந்தார். அந்த பெண் சம்பவத்தன்று தனது வீட்டில் சமையல் செய்வதற்காக அடுப்பை பற்ற வைத்தார். அப்போது எதிர்பாராதவிதமாக அவருடைய ஆடையில் தீப்பற்றியது. தீ மளமளவென உடல் முழுவதும் பரவியது. இதில் அவர் உடல் கருகினார்.

உயிருக்கு ஆபத்தான நிலையில் இருந்த அவரை அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் மீட்டு தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் அந்த பெண் பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.

காதலி இறந்தது குறித்து தகவல் அறிந்த மணிகண்டன் மிகவும் மனவேதனை அடைந்தார். இந்த நிலையில் நேற்று முன்தினம் அவர் தனது வீட்டில் இருந்த மண்எண்ணெய்யை உடலில் ஊற்றி தீக்குளித்தார். இதையடுத்து அக்கம்பக்கத்தில் இருந்தவர்கள் அவரை மீட்டு சிகிச்சைக்காக தஞ்சை மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் அனுமதித்தனர்.

அங்கு சிகிச்சை பெற்று வந்த மணிகண்டன் சிகிச்சை பலனின்றி நேற்று பரிதாபமாக உயிர் இழந்தார். இதுகுறித்து கள்ளப்பெரம்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள். காதலி இறந்த துக்கத்தில் டிரைவர் தற்கொலை செய்து கொண்டது அந்த பகுதியை சேர்ந்த மக்களிடையே சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
Tags:    

Similar News