செய்திகள்
திருட்டு

மண்ணச்சநல்லூரில் தாசில்தார் வீட்டில் 16 பவுன் நகை, பணம் திருட்டு

Published On 2020-10-28 01:46 GMT   |   Update On 2020-10-28 01:46 GMT
மண்ணச்சநல்லூரில் தாசில்தார் வீட்டில் 16 பவுன் நகை மற்றும் பணத்தை திருடி சென்ற மர்ம நபர்களை போலீசார் தேடி வருகின்றனர்.
சமயபுரம்:

மண்ணச்சநல்லூர் ராஜீவ் காந்தி நகரில் வசிப்பவர் சேக்கிழார் (வயது 45). இவர் மணப்பாறை தாலுகா அலுவலகத்தில் சிப்காட் தாசில்தாராக பணியாற்றி வருகிறார். நேற்று காலை அலுவல் பணி காரணமாக திருச்சி கலெக்டர் அலுவலகம் சென்றுவிட்டார். இவரது மனைவி வீட்டை பூட்டிவிட்டு டோல்கேட்டில் உள்ள உறவினர் வீட்டுக்கு சென்றுவிட்டார். இந்த நிலையில் திருச்சியில் இருந்து வீட்டிற்கு திரும்பி வரும்போது சேக்கிழார் டோல்கேட்டில் இருந்த அவரது மனைவியிடம் வீட்டின் சாவியை வாங்கிக்கொண்டு மண்ணச்சநல்லூர் வந்தார். வீட்டிற்கு வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறந்திருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தபோது பீரோ திறந்து இருந்ததும், அதில் உள்ளே இருந்த தங்க சங்கிலி, மோதிரம் உள்பட 16 பவுன் நகை மற்றும் ரூ.10 ஆயிரம் திருடு போயிருந்தது தெரியவந்தது.

இதுபற்றி, மண்ணச்சநல்லூர் போலீஸ் நிலையத்தில் அவர் புகார் அளித்தார். உடனே போலீஸ் இன்ஸ்பெக்டர் குணசேகரன் மற்றும் போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை மேற்கொண்டனர். பின்னர் திருச்சியில் இருந்து போலீஸ் மோப்ப நாய் வரவழைக்கப்பட்டது.

அது சம்பவம் நடைபெற்ற இடத்தில் இருந்து சிறிது தூரம் சென்று நின்று விட்டது. யாரையும் கவ்வி பிடிக்கவில்லை. மேலும் தடயவியல் நிபுணர்களும் சம்பவம் நடைபெற்ற வீட்டிற்கு வந்து அங்கு பதிவாகி இருந்த கைரேகைகளை பதிவு செய்து ஆய்வு செய்தனர். மேலும், இதுகுறித்து மண்ணச்சநல்லூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தாசில்தார் வீட்டில் நகை மற்றும் பணத்தை திருடிச் சென்ற மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News