செய்திகள்
மொபட்டில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறிப்பு
மொபட்டில் சென்ற பெண்ணிடம் 2 பவுன் சங்கிலி பறித்த சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கீரனூர்:
கீரனூரை அடுத்த வெம்மணியை சேர்ந்தவர் ராஜாங்கம். இவரது மனைவி கலா (வயது 40). சம்பவத்தன்று இவர் மொபட்டில் திருச்சி புறவழிச்சாலை பகுதியில் சென்று கொண்டிருந்தார். அப்போது, பின்னால் மோட்டார் சைக்கிளில் முககவசம், தொப்பி அணிந்து வந்த மர்ம ஆசாமிகள் திடீரென்று கலாவின் கழுத்தில் கிடந்த தங்க சங்கிலியை பிடித்து இழுத்தனர். இதனால் அதிர்ச்சி அடைந்த கலா மொபட்டில் சென்றவாரே, ஆசாமிகளுடன் போராடி தனது கழுத்தில் கிடந்த சங்கிலியை ஒரு கையால் இறுகப்பிடித்துக் கொண்டார். இருப்பினும் அந்த ஆசாமிகள் பிடித்து இழுத்ததில் சங்கிலி அறுந்து ஒரு பகுதி ஆசாமிகளின் கையில் சிக்கியது. மீதமுள்ள நகை கலாவின் கையில் சிக்கி தப்பியது.
இதற்கிடையில் நிலைதடுமாறிய கலா மோட்டார் சைக்கிளுடன் கீழே விழுந்து, தொடர்ந்து சத்தம்போட்டார். அக்கம்பக்கத்தினர் விரைந்து வந்தனர். அதற்குள் மர்ம ஆசாமிகள் தப்பி சென்றுவிட்டனர். இந்த சம்பவத்தில் மர்ம ஆசாமிகளின் கையில் 2 பவுன் சங்கிலி சிக்கியது. இதுகுறித்த புகாரின் பேரில் கீரனூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து தங்க சங்கிலியை பறித்த மர்ம ஆசாமிகளை தேடி வருகின்றனர்.