செய்திகள்
தியாகதுருகம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி 2 தொழிலாளர்கள் பலி
கண்டாச்சிமங்கலம் அருகே மோட்டார் சைக்கிள் மோதி 2 தொழிலாளர்கள் பலியான சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.
கண்டாச்சிமங்கலம்:
சேலம் மாவட்டம் அழகாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்தவர் ரமேஷ் மகன் பிராங்கிளின்(வயது 27), இவர் திருவண்ணாமலையில் உள்ள தனது உறவினரின் இல்ல துக்க நிகழ்ச்சிக்கு செல்வதற்காக அழகாபுரம் புதூர் பகுதியைச் சேர்ந்த தனது உறவினர் ராயப்பன் மகன் அந்தோணிசாமி 33, இவரது மகன் வில்சன் 16 ஆகியோருடன் மோட்டார் சைக்கிளில் சேலத்தில் இருந்து திருவண்ணாமலை நோக்கி சென்று கொண்டு இருந்தனர்.
தியாகதுருகம் அருகே பாவந்தூர் பாம்பாத்தா கோவில் அருகே வந்தபோது கட்டுப்பாட்டை இழந்த மோட்டார் சைக்கிள் நிலை தடுமாறி சாலையோரம் பாலம் கட்டும் வேலையில் ஈடுபட்டிருந்த தொழிலாளிகள் மீது மோதியது. இதில் அதே கிராமத்தைச் சேர்ந்த ராஜி மனைவி முத்தம்மாள்(40), துரைராஜ் மனைவி சரஸ்வதி(39), நாகலட்சுமி(35), கோபால் மகன் நாகா(30) ஆகியோர் படுகாயம் அடைந்தனர். உடனே அவர்களை அக்கம்பக்கத்தினர் மீட்டு சிகிச்சைக்காக கள்ளக்குறிச்சி அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர்.
முதல் உதவி சிகிச்சைக்கு பின்னர் முத்தம்மாள் மேல் சிகிச்சைக்காக தனியார் மருத்துவமனையிலும், சரஸ்வதி முண்டியம்பாக்கம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையிலும் அனுமதிக்கப்பட்டனர். இருப்பினும் சிகிச்சை பலன்இன்றி முத்தம்மாள், அந்தோணிசாமி ஆகிய இருவரும் பரிதாபமாக இறந்தனர். இது குறித்து மோட்டார் சைக்கிளில் ஓட்டிவந்த பிராங்கிளின் மீது தியாகதுருகம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.