செய்திகள்
கரூர் பூ மார்க்கெட்டில் ஏலம் நடந்தபோது எடுத்த படம்

ஆயுத பூஜையையொட்டி மல்லிகை பூ விலை உயர்வு

Published On 2020-10-24 07:06 GMT   |   Update On 2020-10-24 07:06 GMT
ஆயுதபூஜையையொட்டி பூக்கள் விலை எகிறியது. அந்தவகையில் மல்லிகை பூ ஒரு கிலோ ரூ.1000-த்தை தாண்டியது.
கரூர்:

கரூர் ரெயில்வே ஜங்ஷன் ரோடு பகுதியில் கரூர் பூ மார்க்கெட் வளாகம் உள்ளது. கரூர் மாவட்டம் மாயனூர், எழுதியாம்பட்டி, தளவாபாளையம், செட்டிபாளையம், செக்கணம், காட்டூர், பிச்சம்பட்டி, திருக்காம்புலியூர் ஆகிய இடங்களில் விளைவிக்கப்படும் பூக்களை விவசாயிகள் நேரடியாக இந்த மார்க்கெட்டிற்கு கொண்டு வந்து ஏலம் மூலம் விற்று செல்கின்றனர்.

மேலும் திண்டுக்கல் உள்ளிட்ட வெளியிடங்களில் இருந்தும் கூட பூக்கள் கொண்டு வரப்படுகிறது. பெரும்பாலும் மல்லிகை, முல்லை, அரளி, ஜாதிப்பூ உள்ளிட்ட பூக்கள் ஏலத்திற்கு வருகிறது. இதனை மொத்த வியாபாரிகள் முதல் சிறு வியாபாரிகள் வரை அனைவரும் வந்து ஏலம் எடுத்து செல்கின்றனர்.

வழக்கம்போல நேற்றும் பூக்கள் ஏலம் விடப்பட்டது. நாளை(ஞாயிற்றுக்கிழமை) ஆயுத பூஜை என்பதால், பூக்களின் தேவை பிரதானமாக இருக்கும். ஆகவே, பூக்களை ஏலம் எடுப்பதில் கடும் போட்டி நிலவியது. அந்தவகையில், ஒரு கிலோ எடை கொண்ட மல்லிகை பூ ரூ.1,000-க்கும், முல்லை ரூ.800-க்கும், அரளி பூ ரூ.400-க்கும், ஜாதிப்பூ ரூ.500-க்கும், செவ்வந்தி ரூ.150-க்கும் ஏலம் போனதாக மார்க்கெட் வியாபாரிகள் தெரிவித்தனர். அந்த பூக்களை சரமாக கட்டி விற்கும்போது அதன் விலை இன்னும் அதிகரிக்கும்.

ஆயுதபூஜைக்கு இன்னும் ஒரு நாளே உள்ளதால் பூக்களின் விலை எகிறியதால் பொதுமக்கள் கலக்கத்தில் உள்ளனர்.
Tags:    

Similar News