செய்திகள்
முதலமைச்சர் சல்கோம்ப் நிறுவனத்தின் செல்போன் மின்னேற்றிகள் உற்பத்தி திட்டத்தை தொடங்கி வைத்தார்

ரூ.11,360 கோடி முதலீட்டில் புதிய தொழில் திட்டங்கள்- எடப்பாடி பழனிசாமி தொடங்கி வைத்தார்

Published On 2020-10-24 01:50 GMT   |   Update On 2020-10-24 01:50 GMT
தமிழகத்தில் ரூ.11,360 கோடி முதலீட்டில் 16,545 பேருக்கு வேலைவாய்ப்பு வழங்கும் வகையில் 16 நிறுவனங்களின் வணிக உற்பத்தி மற்றும் புதிய தொழில் திட்டங்களை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி தொடங்கிவைத்தார்.
சென்னை:

தமிழக அரசு வெளியிட்டுள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டு இருப்பதாவது:-

சென்னை தலைமைச்செயலகத்தில் முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி நேற்று 7 தொழில் நிறுவனங்களின் வணிக உற்பத்தியை தொடக்கி வைத்ததோடு, 9 தொழிற் திட்டங்களுக்கு அடிக்கல் நாட்டினார்.

திருவள்ளூர் மாவட்டம், தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடி முதலீட்டில் 1,800 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் வீல்ஸ் இந்தியா நிறுவனத்தின், வாகன சக்கரங்கள் மற்றும் சுரங்க உபகரணங்கள் உற்பத்தி திட்டம்.

காஞ்சிபுரம் மாவட்டம் ஸ்ரீபெரும்புதூர் நோக்கியா தொலைதொடர்பு சிறப்பு பொருளாதார மண்டலத்தில் ரூ.500 கோடி முதலீட்டில் 5,600 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும், பின்லாந்து நாட்டை சேர்ந்த சல்கோம்ப் நிறுவனத்தின், கைப்பேசி மின்னேற்றிகள் உற்பத்தி திட்டம்.

இருங்காட்டுக்கோட்டை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.12.7 கோடியில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் முத்ரா பைன் பிளாங்க் நிறுவனத்தின் மோட்டார் வாகன உதிரி பாகங்கள் உற்பத்தி திட்டம்.

வல்லம் வடகாலில் ரூ.56.5 கோடி முதலீட்டில் 100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் நாஷ் இண்டஸ்ட்ரீஸ் நிறுவனத்தின், மோட்டார் வாகன உதிரிபாகங்கள் உற்பத்தி திட்டம். ஸ்ரீபெரும்புதூரில் ரூ.22 கோடியில் 39 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஜப்பானை சேர்ந்த பிபிஎல் டெய்டு நிறுவனத்தின் ‘ஷெல் பேரிங், புஷ்’ உற்பத்தி திட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ரூ.70 கோடி முதலீட்டில் 150 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கல்பாதி ஏஜிஎஸ் குழுமத்தின், திண்டுக்கல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (முதல் கட்டம்) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம்.

ராணிப்பேட்டை மாவட்டம் வாலாஜாபேட்டையில் ரூ.37 கோடியில் 90 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பவர் கியர் நிறுவனத்தின் மின் உபகரணங்கள் உற்பத்தி திட்டம். (மொத்தம் ரூ.1,298 கோடி முதலீட்டில் 7,879 பேருக்கு வேலை).

காஞ்சிபுரம் மாவட்டம் இருங்காட்டுக்கோட்டையில் ரூ.150 கோடியில் ஹூண்டாய் நிறுவனத்தின் பயிற்சி மையம் அமைக்கும் திட்டம். இந்நிறுவனத்தின் மேலாண்மை இயக்குனர் எஸ்.எஸ்.கிம், ஹூண்டாய் மோட்டார் நிறுவனத்தின் சார்பாக தமிழ்நாடு தொழில் முன்னேற்ற நிறுவனம் (சிப்காட்), கிருஷ்ணகிரி மாவட்டம், ஓசூர் தொழிற்பூங்காவில் அமைக்கப்படவுள்ள புதுமை கண்டுபிடிப்பு மையத்திற்கு ஒரு கோடி ரூபாய் நிதி வழங்கினார்.

ஒரகடத்தில் ரூ.5,512 கோடியில் 4,738 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் விக்ரம் சோலார் நிறுவனத்தின் சோலார் மாட்யூல் உற்பத்தி திட்டம்.

திருவள்ளூர் மாவட்டம் வல்லூரில் ஆயிரம் கோடி ரூபாய் முதலீட்டில் 1,100 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் இண்டகிரேட்டட் சென்னை பிசினஸ் பார்க் (டிபி ஒர்ல்ட்) நிறுவனத்தின் லாஜிஸ்டிக்ஸ் பார்க் திட்டம். தேர்வாய்கண்டிகை சிப்காட் தொழிற்பூங்காவில் ரூ.600 கோடி முதலீட்டில், 300 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் பிலிப்ஸ் கார்பன் பிளாக் நிறுவனத்தின் கார்பன் உற்பத்தி திட்டம்.

திண்டுக்கல் மாவட்டம் வத்தலக்குண்டில் ரூ.300 கோடியில் 500 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் கல்பாதி ஏஜிஎஸ் குழுமத்தின், திண்டுக்கல் புதுப்பிக்கத்தக்க எரிசக்தி (2-ம் கட்டம்) நிறுவனத்தின் மின் உற்பத்தி திட்டம்.

தூத்துக்குடி மாவட்டம் மேலக்கரந்தையில் ரூ.250 கோடி முதலீட்டில் 228 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் ஸ்ரீவாரிஎனர்ஜி சிஸ்டம்ஸ் நிறுவனத்தின் காற்றாலை மற்றும் அனல் மின் உற்பத்தி துறைகளுக்கான தளவாடங்கள் உற்பத்தி திட்டம்.

விழுப்புரம் மாவட்டம் மயிலத்தில் ரூ.50 கோடி முதலீட்டில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் சென்னை எஸ்எஸ்எஸ்எஸ் எக்யூப்மெண்ட் நிறுவனத்தின் நிலத்தை தோண்டும் உபகரண உற்பத்தி திட்டம். இதன் மொத்த வேலைவாய்ப்பில் 40 சதவீதம் பெண் பொறியாளர்கள் பணியாற்ற உள்ளனர்.

திருப்பூர், கடலூர், நாகப்பட்டினம் மற்றும் திருவாரூர் மாவட்டங்களில் ரூ.2 ஆயிரம் கோடியில் ஆயிரம் பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அதானி கியாஸ் நிறுவனத்தின் நகர கியாஸ் வினியோக திட்டம்.

கோவை மாவட்டம் கள்ளப்பாளையத்தில் ரூ.200 கோடி முதலீட்டில் 400 பேருக்கு வேலைவாய்ப்பு அளிக்கும் அக்வாசப் என்ஜினீயரிங் நிறுவனத்தின் பம்புகள் உற்பத்தி திட்டம். (மொத்தம் ரூ.10 ஆயிரத்து 62 கோடி முதலீட்டில் 8,666 பேருக்கு வேலைவாய்ப்பு).

2019-ம் ஆண்டு நடைபெற்ற உலக முதலீட்டாளர்கள் மாநாட்டின்போது முதல்-அமைச்சர் முன்னிலையில் 3 லட்சத்து 501 கோடி ரூபாய் முதலீடுகள் மற்றும் 10.50 லட்சம் பேருக்கு வேலைவாய்ப்புகள் என்ற வகையில், 304 புரிந்துணர்வு ஒப்பந்தங்கள் கையொப்பமிடப்பட்டன. அவற்றில் 272 திட்டங்கள் (89.47 சதவீதம்) செயல்பாட்டில் உள்ளன.

இந்த நிகழ்ச்சியின்போது, தமிழ்நாடு வழிகாட்டி நிறுவனத்தின் தொழில் வளர்ச்சியின் பங்களிப்பை விவரிக்கும் குறும்படத்தை முதல்-அமைச்சர் எடப்பாடி பழனிசாமி வெளியிட்டார். தமிழ்நாடு செய்தித்தாள் மற்றும் காகித நிறுவனத்தின் பங்கு ஈவுத்தொகையான ரூ.14.66 கோடி தொகைக்கான வரைவுக் காசோலையை எடப்பாடி பழனிசாமியிடம் தொழில்துறை அமைச்சர் எம்.சி.சம்பத் வழங்கினார்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.
Tags:    

Similar News