செய்திகள்
சங்ககிரி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை
சங்ககிரி அருகே கர்ப்பிணி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.
சங்ககிரி:
சங்ககிரி அருகே உள்ள மாவெலிபாளையம் அன்னைநகரை சேர்ந்தவர் சிவா (வயது 23). இவருக்கும் நாமக்கல் மாவட்டம் வையப்பமலை பகுதியை சேர்ந்த சுகன்யா (21) என்பவருக்கும் கடந்த 5 மாதங்களுக்கு முன்பு திருமணம் நடந்தது. சுகன்யா 4 மாத கர்ப்பிணியாக இருந்தார். இந்தநிலையில் கடந்த ஒரு வாரத்திற்கு முன்பு சுகன்யாவுக்கு, அவருடைய மாமியாருடன் குடும்ப தகராறு ஏற்பட்டது. இதையடுத்து அவர் வையப்பமலையில் உள்ள தனது தாய் வீட்டிற்கு சென்றுவிட்டார். நேற்று முன்தினம் சிவா, வையப்பமலைக்கு சென்று சுகன்யாவை சமாதானப்படுத்தி, தனது வீட்டிற்கு அழைத்து வந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை சிவா சங்ககிரியில் உள்ள லாரி டயர் கம்பெனிக்கு வேலைக்கு சென்று விட்டார். வீட்டில் இருந்த சுகன்யா திடீரென தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து தகவல் அறிந்த சங்ககிரி போலீசார் விரைந்து சென்று, சுகன்யாவின் உடலை கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும் இதுதொடர்பாக சங்ககிரி உதவி கலெக்டர் அமிர்ந்தலிங்கம் மற்றும் போலீசார் விசாரணை நடத்தி வருகிறார்கள்.