செய்திகள்
கோப்புபடம்

விக்கிரமசிங்கபுரத்தில் பட்டப்பகலில் வீடுபுகுந்து 12 பவுன் நகை திருட்டு

Published On 2020-10-12 14:21 GMT   |   Update On 2020-10-12 14:21 GMT
விக்கிரமசிங்கபுரத்தில் பட்டப்பகலில் வீடுபுகுந்து 12 பவுன் நகைகளை திருடிய மர்மநபரை போலீசார் வலைவீசி தேடி வருகின்றனர்.
விக்கிரமசிங்கபுரம்:

விக்கிரமசிங்கபுரம் அம்பலவாணபுரம் வாய்க்கால் தெருவைச் சேர்ந்தவர் செல்வராஜ். இவருடைய மனைவி சுந்தரலீலா (வயது 51). இவர்களுக்கு ஒரு மகன், ஒரு மகள் உள்ளனர். செல்வராஜ் கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு இறந்து விட்டார். மகன் சிங்கப்பூரிலும், மகள் சென்னையிலும் வசித்து வருகின்றனர்.

இதனால் சுந்தரலீலா தனது வீட்டில் தனியாக வசித்து வருகிறார். இவர் நேற்று காலையில் அங்குள்ள கிறிஸ்தவ ஆலயத்துக்கு புறப்பட்டு சென்றார். அப்போது அவர் தனது வீட்டை பூட்டி விட்டு, சாவியை கதவின் அருகில் மறைவான இடத்தில் வைத்து சென்றார்.

இதனை நோட்டமிட்ட மர்மநபர் நைசாக சுந்தரலீலாவின் வீட்டின் சாவியை எடுத்து, கதவை திறந்து உள்ளே நுழைந்தார். பின்னர் அவர் கதவை உள்பக்கமாக பூட்டிக் கொண்டு, வீட்டில் உள்ள பீரோவை உடைத்து திறந்து, அதில் இருந்த 12 பவுன் நகைகளை திருடினார். பின்னர் அவர், வீட்டின் பின்பக்க கதவை திறந்து வெளியே தப்பி சென்றார்.

ஆலயத்தில் இருந்து திரும்பி வந்த சுந்தரலீலா தனது வீட்டின் பின்பக்க கதவு திறந்து கிடந்ததையும், பீரோ உடைக்கப்பட்டு நகை திருடு போனதையும் பார்த்து அதிர்ச்சி அடைந்தார். இதுகுறித்த புகாரின்பேரில், விக்கிரமசிங்கபுரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து, வீடு புகுந்து நகைகளை திருடிய மர்மநபரை வலைவீசி தேடி வருகின்றனர்.
Tags:    

Similar News