செய்திகள்
கோப்புபடம்

சென்னை, திருவண்ணாமலையை சேர்ந்த 2 ரவுடிகள் சேலத்தில் கைது

Published On 2020-10-12 07:03 GMT   |   Update On 2020-10-12 07:03 GMT
சென்னை, திருவண்ணாமலையை சேர்ந்த பிரபல ரவுடிகள் 2 பேரை சேலத்தில் போலீசார் கைது செய்து, கொள்ளை முயற்சியை முறியடித்தனர்.
சேலம்:

சென்னையை சேர்ந்தவர் முருகன் (வயது 40). திருவண்ணாமலையை சேர்ந்தவர் சங்கர் (39). கூட்டாளிகளான இவர்கள் 2 பேர் மீதும் சென்னை, திருவண்ணாமலை உள்ளிட்ட பல்வேறு மாவட்டங்களில் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. சிறையில் இருந்து ஜாமீனில் வெளியில் வந்த முருகன், சங்கர் தலைமறைவாகி உள்ளனர். இதனால் 2 பேரும் தேடப்படும் குற்றவாளிகளாக அறிவிக்கப்பட்டு, சென்னை போலீசார் தேடி வந்தனர்.

இந்த நிலையில் இவர்கள் சென்னையில் இருந்து மோட்டார் சைக்கிளில் வெளி மாவட்டத்திற்கு தப்பி செல்வதாக சென்னை போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி தமிழகம் முழுவதும் போலீசார் உஷார் படுத்தப்பட்டனர். இதையொட்டி நேற்று முன்தினம் இரவு சேலம், நாமக்கல் உள்ளிட்ட அனைத்து மாவட்டங்களிலும் போலீசார் தீவிர கண்காணிப்பு பணியில் ஈடுபட்டனர்.

ரவுடிகள் 2 பேரும் சேலத்தில் பதுங்கி இருப்பதாக ரகசிய தகவல் கிடைத்தது. சேலம் மாநகர போலீஸ் கமிஷனர் செந்தில்குமார் உத்தரவின் பேரில், துணை கமிஷனர் சந்திரசேகரன், உதவி கமிஷனர் பூபதி ராஜன் ஆகியோர் தலைமையில் போலீசார் நேற்று முன்தினம் விடிய, விடிய சோதனை நடத்தி, அவர்களை தேடி வந்தனர்.

இந்த நிலையில் சேலம் அஸ்தம்பட்டி காக்கையன் சுடுகாடு பகுதியில் அவர்கள் பதுங்கி இருப்பதாக போலீசாருக்கு தகவல் கிடைத்தது. இதையொட்டி போலீசார் அங்கு சென்று சுற்றிவளைத்து 2 பேரையும் கைது செய்தனர். பின்னர் அவர்களை ரகசிய இடத்தில் வைத்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர்.

இது குறித்து போலீசார் கூறும்போது, 2 பேரும் மீதும் வழிப்பறி, கொள்ளை உள்ளிட்ட பல்வேறு வழக்குகள் நிலுவையில் உள்ளன. மேலும் அவர்கள் சென்னையில் இருந்து தப்பி வந்து சேலம், நாமக்கல் மாவட்டங்களில் கொள்ளையடிக்க திட்டம் தீட்டி உள்ளனர். இவர்களை கைது செய்துள்ளதால் சேலம், நாமக்கல்லில் கொள்ளை முயற்சி முறியடிக்கப்பட்டுள்ளது என்று கூறினர்.
Tags:    

Similar News