செய்திகள்
தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேர் கைது
தஞ்சையில் லாட்டரி சீட்டு விற்ற 2 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
தஞ்சாவூர்:
தஞ்சை கிழக்கு போலீஸ் நிலைய போலீஸ் சப்-இன்ஸ்பெக்டர் டேவிட் மற்றும் போலீசார் ரோந்து பணியில் ஈடுபட்டனர். அப்போது கரந்தை பாலோபநந்தவனம் அரசு போக்குவரத்து கழக பணிமனை முன்பு சந்தேகத்தின் பேரில் நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில் அவர், தஞ்சை கங்காதரன் காலனியை சேர்ந்த தியாகராஜன் (வயது 36) என்பதும், விற்பனைக்காக தமிழக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர். இதேபோல் மேற்கு போலீஸ் நிலைய போலீசார் ரோந்து பணி மேற்கொண்டபோது வடக்கு வீதியில் உள்ள ஒரு டீக்கடை முன்பு நின்ற ஒருவரை பிடித்து விசாரணை நடத்தினர். விசாரணையில், அவர் சத்தோஜியப்பா சந்து பகுதியை சேர்ந்த சண்முகம் மகன் ராஜா (24) என்பதும், விற்பனைக்காக அரசால் தடை செய்யப்பட்ட லாட்டரி சீட்டுகள் வைத்திருந்ததும் தெரியவந்தது. இதையடுத்து போலீசார் அவரை கைது செய்தனர்.