செய்திகள்
கீழக்கரையில் வீட்டு பூட்டை உடைத்து ரூ.2 லட்சம் திருடியவர் கைது
கீழக்கரையில் பட்டப்பகலில் கொத்தனார் வீட்டில் பூட்டை உடைத்து உள்ளே நுழைந்து ரூ.2 லட்சம் திருடியவரை கீழக்கரை போலீசார் கைது செய்தனர்.
கீழக்கரை:
கமுதி அருகே மண்டல மாணிக்கம் கிராமத்தை சேர்ந்தவர் திருகண்ணன் இவர் கீழக்கரை 200 பிளாட் பகுதியில் வசித்து வருகிறார். இவரது உறவினரின் திருமண செலவுக்காக வீட்டின் பீரோவில் ரூ. 2 லட்சம் வைத்திருந்தார்.
இந்தநிலையில் நேற்று காலை வழக்கம்போல் வீட்டை பூட்டி விட்டு வேலைக்கு சென்று விட்டார். திரும்பி வந்து பார்த்தபோது வீட்டின் கதவு திறக்கப்பட்டு, பீரோ உடைக்கப்பட்ட நிலையில் இருந்ததை கண்டு அதிர்ச்சி அடைந்தார். பீரோவை சோதனை செய்தபோது உள்ளே இருந்த ரூ.2 லட்சம் மாயமானது தெரியவந்தது. இதுகுறித்து கீழக்கரை போலீசில் திருகண்ணன் புகார் அளித்தார்.
கீழக்கரை போலீஸ் துணை சூப்பிரண்டு முருகேசன் உத்தரவின்பேரில் சப்-இன்ஸ்பெக்டர் சரவணன், தனிப்பிரிவு தலைமை காவலர் வரதன் மற்றும் போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று விசாரணை மேற்கொண்டதில் பக்கத்து வீட்டில் குடியிருக்கும் மணிகண்டன் (வயது 34) என்பவர் மீது போலீசாருக்கு சந்தேகம் ஏற்பட்டது. இதையடுத்து மணிகண்டனிடம் தீவிர விசாரணை நடத்தியதில் பணம் திருடியது தெரியவந்தது.
அந்த பணத்தை வீட்டுக்குள் புதைத்து வைத்திருப்பதாக போலீசாரிடம் தகவல் தெரிவித்தார். இதைத் தொடர்ந்து போலீசார் விரைந்து சென்று வீட்டில் புதைக்கப்பட்டிருந்த ரூ.1,54,500-ஐ கைப்பற்றி வழக்குபதிந்து அவரை கைது செய்தனர்.