செய்திகள்
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் 2 கிலோ வெள்ளி பொருட்கள், 16 பவுன் நகைகள், பணம் திருட்டு
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருட்கள், 16 பவுன் நகைகள், பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
திருச்சி:
தனியார் நிறுவன ஊழியர் வீட்டில் பூட்டை உடைத்து 2 கிலோ வெள்ளி பொருட்கள், 16 பவுன் நகைகள், பணத்தை மர்ம ஆசாமிகள் திருடிச்சென்றனர்.
இது குறித்து போலீஸ்தரப்பில் கூறப்படுவதாவது:-
திருச்சி வயலூர் ரோடு சீனிவாசநகரை சேர்ந்தவர் பிரபாகரன் (வயது 38). இவர் தனியார் நிறுவனத்தில் ஊழியராக வேலை பார்த்து வருகிறார். இவர் கடந்த 2-ந் தேதி வீட்டை பூட்டிவிட்டு குடும்பத்தினருடன் புதுக்கோட்டைக்கு சென்றிருந்தார்.
இந்தநிலையில் நேற்று முன்தினம் அவர் மீண்டும் வீடு திரும்பினார். அப்போது வீட்டின் முன்பக்க கதவில் இருந்த பூட்டு உடைக்கப்பட்டு கிடந்தது. இதைப்பார்த்து அதிர்ச்சி அடைந்த அவர் வீட்டின் உள்ளே சென்று பார்த்தார்.
அப்போது, பீரோ உடைக்கப்பட்டு கிடந்தது. அதில் இருந்த 16 பவுன் தங்க நகைகள், 2 கிலோ வெள்ளி பொருட்கள், ரூ.25 ஆயிரம் மற்றும் ஒரு செல்போன் ஆகியவை திருட்டு போயிருந்தது. இதனால் அதிர்ச்சி அடைந்த பிரபாகரன் இதுகுறித்து அரசு மருத்துவமனை போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். போலீசார் சம்பவ இடத்துக்கு விரைந்து வந்து விசாரணை நடத்தினார்கள்.
விசாரணையில் வீட்டில் ஆள் இல்லாததை நோட்டமிட்ட மர்ம ஆசாமிகள், வீட்டின் பூட்டை உடைத்து வெள்ளி பொருட்கள், நகை, பணத்தை திருடிச்சென்றது தெரியவந்தது. இதைத்தொடர்ந்து தடயவியல் துறையினர் வரவழைக்கப்பட்டு அங்கு பதிவாகி இருந்த மர்ம ஆசாமிகளின் கைரேகைகள் மற்றும் தடயங்களை சேகரித்தனர். மேலும் இதுகுறித்த புகாரின் பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்ம ஆசாமிகளை தேடி வருகிறார்கள்.