செய்திகள்
கோப்புப்படம்

5 வயது சிறுமியை கொன்று தாய் கிணற்றில் குதித்து தற்கொலை

Published On 2020-10-01 00:34 GMT   |   Update On 2020-10-01 00:34 GMT
5 வயது சிறுமியை கொன்று தாய் கிணற்றில் குதித்து தற்கொலை செய்து கொண்ட சம்பவம் தொடர்பாக போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்
பென்னாகரம்:

தர்மபுரி மாவட்டம் பென்னாகரம் அருகே உள்ள முதுகம்பட்டி தின்னூர் கிராமத்தைச் சேர்ந்தவர் சுந்தரேசன், கூலித்தொழிலாளி. இவரது மனைவி செந்தாமரை (வயது 25). இவர்களுக்கு கடந்த சில ஆண்டுகளுக்கு முன்பு திருமணம் நடைபெற்றது. இந்த தம்பதிக்கு லாவண்யா (7), மோனிகா (5) என்ற 2 பெண் குழந்தைகள் இருந்தனர்.

இந்த நிலையில் கணவன்-மனைவிக்கு இடையே அடிக்கடி குடும்ப தகராறு ஏற்பட்டு வந்துள்ளது. நேற்று முன்தினம் இரவும் அவர்களுக்குள் தகராறு ஏற்பட்டுள்ளது. இதனால் மனமுடைந்த செந்தாமரை தனது 2-வது மகள் மோனிகாவுடன் அதே பகுதியை சேர்ந்த மாது என்பவருடைய தோட்டத்திற்கு சென்றார். அங்கு திடீரென தனது மகளை 50 அடி ஆழ கிணற்றில் வீசி கொன்று விட்டு தானும் குதித்து தற்கொலை செய்து கொண்டார். இதுகுறித்து அக்கம் பக்கத்தினர் பென்னாகரம் போலீஸ் நிலையத்திற்கும், தீயணைப்பு நிலையத்திற்கும் தகவல் தெரிவித்தனர். அதன்பேரில் தீயணைப்பு படை வீரர்கள் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று கிணற்றில் இருந்து செந்தாமரை மற்றும் சிறுமி மோனிகா ஆகிய 2 பேரின் உடல்களையும் மீட்டு மேலே கொண்டு வந்தனர். அப்போது அங்கு திரண்டு இருந்த செந்தாமரையின் குடும்பத்தினர் மற்றும் உறவினர்கள் கதறி அழுதனர்.

பின்னர் போலீசார் 2 பேரின் உடல்களையும் கைப்பற்றி பிரேத பரிசோதனைக்காக பென்னாகரம் அரசு தலைமை மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். இதுகுறித்து பென்னாகரம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.
Tags:    

Similar News