செய்திகள்
திருச்செங்கோடு அருகே தீ விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலி
திருச்செங்கோடு அருகே தீ விபத்தில் விசைத்தறி தொழிலாளி பலியான சம்பவம் குறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
எலச்சிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் திருச்செங்கோடு அருகே உள்ள தேவனாங்குறிச்சி பகுதியை சேர்ந்தவர் கந்தசாமி (வயது 65). விசைத்தறி தொழிலாளி. இவர் கடந்த 23-ந் தேதி டீ போடுவதற்காக கியாஸ் அடுப்பை பற்ற வைக்க முயன்றார். அப்போது கியாஸ் கசிவால் எதிர்பாராதவிதமாக ஏற்பட்ட தீ விபத்தில் கந்தசாமி பலத்த தீக்காயம் அடைந்தார். அவரை அக்கம் பக்கத்தில் உள்ளவர்கள் மீட்டு திருச்செங்கோட்டில் உள்ள தனியார் ஆஸ்பத்திரி ஒன்றில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல்சிகிச்சைக்காக சேலம் அரசு மருத்துவக்கல்லூரி மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். அங்கு சிகிச்சை பலனின்றி நேற்று கந்தசாமி பரிதாபமாக இறந்தார். இந்த சம்பவம் குறித்து திருச்செங்கோடு ரூரல் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.