செய்திகள்
தற்கொலை முயற்சி

மானூர் அருகே போலீசார் தாக்கியதாக விவசாயி தற்கொலை முயற்சி

Published On 2020-09-25 11:38 GMT   |   Update On 2020-09-25 11:38 GMT
மானூர் அருகே போலீசார் தாக்கியதாக கூறி விவசாயி தற்கொலை முயற்சியில் ஈடுபட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மானூர்:

மானூர் அருகே உள்ள சுப்பையாபுரத்தை சேர்ந்தவர் முருகன் (வயது 60), விவசாயி. இவருக்கும், அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு முருகன் என்பவருக்கும் இடப்பிரச்சினை சம்பந்தமாக முன்பகை இருந்து வருகிறது. இதனால் ஏற்பட்ட தகராறில் கடந்த 3-ந் தேதி அதே ஊரைச் சேர்ந்த மற்றொரு முருகனின் மனைவி தேன்மலர் (42), மகன் முத்துக்காளை (25) ஆகியோரை விவசாயி முருகன், உறவினர்களான வெங்கடேஷ், கலையரசன் மற்றும் வீரகுட்டி ஆகியோருடன் சேர்ந்து அரிவாளால் வெட்டி காயப்படுத்தியுள்ளார். இதுகுறித்து மானூர் போலீசில் வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

இந்நிலையில் கடந்த 22-ந் தேதி முத்துக்காளை தன் வீட்டின் முன் வெங்காயம் காயப் போட்டிருந்தார். அப்போது விவசாயி முருகனும், அவரது மகன் கலைச்செல்வனும் தங்களது மோட்டார்சைக்கிளில் வந்து காயப்போட்டிருந்த வெங்காயத்தின் மேல் ஏற்றினாராம். இதனால் முத்துகாளைக்கும், விவசாயி முருகன், கலைச்செல்வன் ஆகியோருக்கும் இடையே தகராறு ஏற்பட்டது. இதில் ஆத்திரமடைந்த விவசாயி முருகன், கலைச்செல்வன் ஆகிய இருவரும் அரிவாளை காட்டி முத்துக்காளையிடம் கொலை மிரட்டல் விடுத்தனர். 

இதுகுறித்த புகாரின்பேரில் மானூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து விவசாயி முருகன், கலைச்செல்வன் ஆகியோரை தேடி வந்தனர். இந்த நிலையில் போலீசார் தாக்கியதாக கூறி, விஷம் அருந்திய நிலையில் விவசாயி முருகன் பாளையங்கோட்டை ஐகிரவுண்டு அரசு மருத்துவமனையில் சிகிச்சையில் சேர்ந்துள்ளார்.
Tags:    

Similar News