செய்திகள்
கடத்தல்

திருச்சியில் காதல் திருமணம் செய்த மகளை கடத்த முயன்ற பெற்றோர்

Published On 2020-09-23 07:55 GMT   |   Update On 2020-09-23 07:55 GMT
திருச்சியில் காதல் திருமணம் செய்த மகளை பெற்றோர் கடத்த முயன்றதால் பெரும் பரபரப்பு ஏற்பட்டது. போலீசார் அவர்களை விரட்டி பிடித்தனர்.
திருச்சி:

தூத்துக்குடி மாவட்டத்தைச் சேர்ந்த 24 வயது பெண்ணும் திருச்சியை சேர்ந்த ஒரு வாலிபரும் காரைக்குடியில் உள்ள ஒரு என்ஜினீயரிங் கல்லூரியில் படித்து வந்தனர். அப்போது அவர்களுக்கு இடையே காதல் ஏற்பட்டது.

அந்த வாலிபர் தான் காதலித்த பெண்ணை திருச்சிக்கு அழைத்து வந்து திருமணம் செய்து கொண்டதாக தெரிகிறது. இவர்கள் இருவரும் வெவ்வேறு சமூகத்தை சேர்ந்தவர்கள் என்பதால் பெண்ணின் வீட்டில் பலத்த எதிர்ப்பு கிளம்பியது.

இந்நிலையில் தனது மகளை தேடி அவரது பெற்றோர் மற்றும் உறவினர்கள் நேற்று திருச்சிக்கு வந்தனர். திருச்சியில் அவர்கள் கண்டோன்மெண்ட் பகுதியில் அவர்கள் தங்கியிருப்பது அவர்களுக்கு தெரியவந்தது.

பகல் 2 மணி அளவில் கண்டோன்மெண்ட் பகுதியில் சாலையோரம் நின்று காதல் ஜோடியிடம் பேசிக் கொண்டிருந்தனர். அப்போது திடீரென அந்தப் பெண்ணை அவரது பெற்றோர் ஒரு காரில் கடத்தி செல்ல முயன்றதாக கூறப்படுகிறது. இதனால் அந்த பகுதியில் பெரும் பரபரப்பு ஏற்பட்டது.

அப்போது அந்த வழியாக திருச்சி மாநகர போலீஸ் துணை கமிஷனர் பவன்குமார் ரெட்டி சென்றுகொண்டிருந்தார். இந்த சம்பவத்தை பார்த்த அவர் உடனடியாக காரை மடக்கி பிடிக்க உத்தரவிட்டார். இதனைத் தொடர்ந்து கண்டோன்மெண்ட் போலீசார் அந்த காரை விரட்டிச் சென்று பிடித்து காதல் ஜோடியை மீட்டனர்.

கண்டோன்மெண்ட் அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்தில் வைத்து விசாரணை நடத்தினார்கள். அப்போது அந்தப் பெண் தனது பெற்றோருடன் செல்ல விருப்பம் இல்லை என்றும் தனது காதல் கணவருடன் தான் செல்வேன் என்றும் கூறியதால் அவர்களிடம் எழுதி வாங்கிக்கொண்டு அனுப்பி வைத்தனர்.
Tags:    

Similar News