செய்திகள்
மறைந்த முன்னாள் எம்எல்ஏ சிவராஜ் உடலுக்கு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி செலுத்திய காட்சி

மறைந்த முன்னாள் எம்எல்ஏ சிவராஜ் உடலுக்கு கட்சி பிரமுகர்கள், பொதுமக்கள் அஞ்சலி

Published On 2020-09-22 11:32 GMT   |   Update On 2020-09-22 11:32 GMT
மறைந்த ரிஷிவந்தியம் தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.சிவராஜ் உடலுக்கு பல்வேறு அரசியல் கட்சி பிரமுகர்கள் மற்றும் பொதுமக்கள் அஞ்சலி செலுத்தினர். கடைகளை அடைத்து வியாபாரிகளும் இரங்கல் தெரிவித்தனர்.
திருக்கோவிலூர்:

திருக்கோவிலூர் பெருமாள்நாயக்கர்தெருவில் வசித்து வந்தவர் ரிஷிவந்தியம் சட்டமன்ற தொகுதி முன்னாள் எம்.எல்.ஏ.வும், அம்மா மக்கள் முன்னேற்ற கழகத்தின் மாநில அமைப்பு செயலாளருமான சு.சிவராஜ் (வயது 65). கடந்த சில தினங்களுக்கு முன்னர் உடல்நலம் பாதிக்கப்பட்டு சிகிச்சைக்காக சென்னையில் உள்ள தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அவர் சிகிச்சை பலனின்றி நேற்று முன்தினம் இறந்தார்.

இதையடுத்து சென்னையில் இருந்து ஆம்புலன்ஸ் மூலம் திருக்கோவிலூரில் உள்ள அவரது வீட்டுக்கு கொண்டுவரப்பட்ட முன்னாள் எம்.எல்.ஏ. சிவராஜியின் உடலை பார்த்து குடும்பத்தினர், உறவினர்கள், நண்பர்கள் மற்றும் முக்கிய பிரமுகர்கள் கதறி அழுதனர்.

இதைத் தொடர்ந்து பொதுமக்கள் அஞ்சலிக்காக சிவராஜியின் உடல் நேற்று காலை 7 மணியளவில் வடிவேல் நகரில் அவருக்கு சொந்தமான பள்ளி வளாகத்தில் வைக்கப்பட்டது. அங்கு அனைத்து கட்சி பிரமுகர்கள், வியாபார பிரமுகர்கள், பொதுமக்கள் உள்ளிட்ட அனைத்து தரப்பினரும் கலந்துகொண்டு அஞ்சலி செலுத்தினார்கள்.

பின்னர் மாலை 4.30 மணியளவில் பள்ளி வளாகத்தில் இருந்து சிவாஜியின் உடல் அலங்கரிக்கப்பட்ட வாகனத்தில் வைத்து ஊர்வலமாக பஸ்நிலையம் அருகில் உள்ள சுடுகாட்டுக்கு கொண்டு செல்லப்பட்டது. அங்கு இறுதி சடங்கு நிகழ்ச்சிகள் முடிந்ததும் சிவராஜியின் மகன் பிரபு சிதைக்கு தீ மூட்டினார். அப்போது அங்கே கூடியிருந்த கட்சி தொண்டர்கள் உள்பட அனைவரும் கண்ணீர் சிந்தினர்.

முன்னதாக முன்னாள் எம்.எல்.ஏ சிவராஜ் மறைவையொட்டி அவருக்கு இரங்கல் தெரிவிக்கும் வகையில் திருக்கோவிலூரில் அனைத்து கடைகளும் மூடப்பட்டன. இதையடுத்து அசம்பாவித சம்பவங்கள் நடக்காமல் இருக்க துணை போலீஸ் சூப்பிரண்டு ராஜி உத்தரவின் பேரில் பலத்த போலீஸ் பாதுகாப்பு போடப்பட்டது.

அதேபோல் அரகண்டநல்லூரில் உள்ள ஒழுங்குமுறை விற்பனைக்கூடத்தில் விவசாயிகள் கொண்டுவந்த விளைபொருட்களுக்கு வியாபாரிகள் விலைபோடவில்லை. இதனால் நேற்று விற்பனைக்கூடத்தில் கொள்முதல் நடைபெறவில்லை. இன்று(செவ்வாய்கிழமை) கொள்முதல் வழக்கம்போல் நடைபெறும் என அறிவிக்கப்பட்டது.
Tags:    

Similar News