செய்திகள்
ரேஷன் அரிசி பறிமுதல்

ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி பறிமுதல்

Published On 2020-09-19 08:06 GMT   |   Update On 2020-09-19 08:06 GMT
பொன்னேரி அருகே ஆந்திராவுக்கு கடத்த முயன்ற 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை வருவாய்த்துறை அதிகாரிகள் பறிமுதல் செய்தனர்.
பொன்னேரி:

பொன்னேரி அருகே உள்ள விடதண்டலம் கிராமத்தில் உள்ள ரேஷன் கடையில் பொதுமக்களுக்கு விலையில்லா ரேஷன் அரிசி வினியோகம் செய்யப்படுகிறது. இந்த அரிசியை சிலர் குறைந்த விலைக்கு வாங்கி வைத்து, கிராமத்தில் இருந்து ஆந்திராவுக்கு அரிசியை கடத்துவதாக பொன்னேரி ஆர்.டி.ஓ. வித்யாவுக்கு ரகசிய தகவல் கிடைத்தது.

அவரது உத்தரவின்படி தாசில்தார் மணிகண்டன் ஆலோசனையின் பேரில், சம்பவ இடத்திற்கு திருப்பாலைவனம் வருவாய் ஆய்வாளர் நட்ராஜ் நேரில் சென்று ஆய்வு நடத்தினார். அப்போது அக்கிராமத்தில் உள்ள ஒரு குடோனில் 19 மூட்டைகளில் பதுக்கி வைக்கப்பட்ட 1 டன் ரேஷன் அரிசி கண்டுபிடிக்கப்பட்டது. அதைத்தொடர்ந்து, அங்கிருந்த 1 டன் ரேஷன் அரிசி மூட்டைகளை பறிமுதல் செய்த அதிகாரிகள், அதை பொன்னேரி தாலுகா அலுவலகத்தில் ஒப்படைத்தனர். ரேஷன் அரிசி பதுக்கலில் ஈடுபட்ட கும்பல் தப்பி தலைமறைவானது.
Tags:    

Similar News