செய்திகள்
பள்ளிபாளையம் அருகே வாய்க்காலில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பலி
பள்ளிபாளையம் அருகே நண்பர்களுடன் வாய்க்காலில் குளித்த தொழிலாளி தண்ணீரில் மூழ்கி பரிதாபமாக உயிரிழந்தார்.
பள்ளிபாளையம்:
நாமக்கல் மாவட்டம் பள்ளிபாளையம் அருகே உள்ள வெப்படை எம்.ஜி.ஆர். நகரை சேர்ந்தவர் மணி. இவருடைய மகன் கார்த்திக் (வயது 27). இவர் மூட்டை தூக்கும் தொழிலாளியாக வேலை செய்து வந்தார். இந்தநிலையில் நேற்று காலை கார்த்திக் தனது நண்பர்களுடன் அப்பகுதியில் உள்ள வாய்க்காலில் குளிக்க சென்றார். அங்கு அவர்கள் ஆனந்தமாக குளித்து கொண்டிருந்தனர். அப்போது நண்பர்கள் ஒருவருக்கு ஒருவர் போட்டி போட்டு கொண்டு நீந்தி விளையாடி கொண்டிருந்தனர். அப்போது வாய்க்காலில் உள்ள செடியில் கார்த்திக்கின் கால் சிக்கி தண்ணீரில் மூழ்கி கார்த்திக் பரிதாபமாக இறந்தார்.
இதுபற்றி அறிந்ததும் தீயணைப்பு வீரர்கள் வாய்க்கால் பகுதிக்கு விரைந்து சென்று பலியான கார்த்திக்கின் உடலை மீட்டனர். மேலும் வெப்படை போலீசார் சம்பவ இடம் சென்று வாலிபரின் உடலை கைப்பற்றி பள்ளிபாளையம் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்காக அனுப்பி வைத்தனர். இதுகுறித்து வெப்படை போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.