செய்திகள்
திண்டுக்கல் அருகே பெண்ணிடம் செல்போன் பறிப்பு: 3 வாலிபர்கள் கைது
திண்டுக்கல் அருகே வீட்டில் தனியாக இருந்த பெண்ணிடம் செல்போனை பறித்து சென்ற 3 வாலிபர்களை போலீசார் கைது செய்னர்.
குள்ளனம்பட்டி:
திண்டுக்கல் அருகே உள்ள மா.மு. கோவிலூரை அடுத்த ஆரோக்கியசாமி நகரை சேர்ந்தவர் சிவராஜ். இவருடைய மனைவி சத்யா (வயது 28). சம்பவத்தன்று இவர் வீட்டில் தனியாக இருந்த போது, வீட்டுக்குள் புகுந்த மர்ம நபர்கள் கத்தியை காட்டி மிரட்டி அவரிடம் இருந்த 3 செல்போன்கள் பறித்துக்கொண்டு வீட்டின் முன்பு நிறுத்தப்பட்டிருந்த மோட்டார் சைக்கிளை திருடி சென்று விட்டனர்.
இதுகுறித்து தாலுகா போலீஸ் நிலையத்தில் சத்யா புகார் கொடுத்தார். அதன்பேரில் போலீசார் வழக்குப்பதிவு செய்து, மர்ம நபர்களை வலைவீசி தேடி வந்தனர். இந்த நிலையில் தாலுகா போலீஸ் இன்ஸ்பெக்டர் தெய்வம், சப்-இன்ஸ்பெக்டர் வேல்முருகன் ஆகியோர் தலைமையிலான போலீசார் நேற்று ஓடைப்பட்டி பிரிவு அருகே ரோந்து பணியில் ஈடுபட்டிருந்தனர்.
அப்போது அந்த வழியாக மோட்டார் சைக்கிளில் வந்த வாலிபரை நிறுத்தி விசாரித்தனர். விசாரணையில் அவர் வ.உ.சி நகரை சேர்ந்த சுதன்பிரபு (வயது 25) என்பதும், அவருடைய நண்பர்களான குமரன் திருநகரை சேர்ந்த தினேஷ் (28), கோடங்கிபட்டியை சேர்ந்த மாரிமுத்து (23) ஆகியோருடன் சேர்ந்து சத்யாவிடம் செல்போன் பறித்தது மற்றும் மோட்டார் சைக்கிளை திருடியதை ஒப்புக்கொண்டார்.
இதையடுத்து அவரை கைது செய்த போலீசார், அவர் கூறிய தகவலின் அடிப்படையில் மற்ற 2 பேரையும் மடக்கி பிடித்து கைது செய்தனர். மேலும் அவர்களிடமிருந்து 3 செல்போன்கள், 3 கத்திகள் மற்றும் 4 மோட்டார் சைக்கிள்களை போலீசார் பறிமுதல் செய்தனர்.