செய்திகள்
கோப்புபடம்

திருப்பூர் மாவட்டத்தில் முககவசம் அணியாத 224 பேருக்கு அபராதம்

Published On 2020-09-17 11:24 GMT   |   Update On 2020-09-17 11:24 GMT
திருப்பூர் மாவட்டத்தில் முக கவசம்அணியாமல் வந்த 224 பேருக்கு அபராதம் விதித்து பறக்கும் படை அதிகாரிகள் நடவடிக்கை எடுத்தனர்.
திருப்பூர்:

திருப்பூர் மாவட்டத்தில் கொரோனா பரவலை தடுக்கும் வகையில் வருவாய்துறை, உள்ளாட்சித் துறை, காவல் துறையை சேர்ந்த அதிகாரிகள் கொண்ட பறக்கும் படைகள் அமைக்கப்பட்டுள்ளது. மாவட்டத்தில் 22 பறக்கும்படை குழு அமைக்கப்பட்டு இந்த குழுவினர் பொது இடங்களில் பொது மக்கள் முக கவசம் அணியாமல் வந்தால் அவர்களுக்கு அபராதம் விதிப்பது, கடைகள், வர்த்தக நிறுவனங்களில் சமூக இடைவெளியை கடைபிடிக்காமல் விதிமீறல் இருந்தால் அபராத நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகிறார்கள்.

திருப்பூர் மாவட்டத்தில் நேற்று திருப்பூர் மாநகராட்சி முதலாவது, இரண்டாவது, மூன்றாவது மண்டல பகுதிகள், அவினாசி ஒன்றியம், பொங்கலூர் ஒன்றியம், வெள்ளகோவில் நகராட்சி பகுதியை தவிர 16 பறக்கும்படை குழுவினர் ஆய்வு செய்தனர்.

அதன் படி மொத்தம் 375 கடைகள், தொழில் நிறுவனங்களில் குழுவினர் ஆய்வு செய்து 54 நிறுவனங்களில் விதிமீறல் கண்டுபிடிக்கப்பட்டு அந்த நிறுவனங்கள் மீது நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டது.

இதுபோல் முக கவசம் அணியாமல் வீதியில் நடமாடியவர்கள் குறித்து 2,887 பேரை சோதனை செய்து 224 பேர் முக கவசம் அணியாமல் வந்தது தெரிய வந்தது. அவர்களுக்கு தலா ரூ.200 அபராதம் விதிக்கப்பட்டது.

பறக்கும் படை குழுக்கள் மூலமாக மாவட்டம் முழுவதும் ரூ.72 ஆயிரத்து 700 அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. அதிகபட்சமாக பல்லடம் ஒன்றிய பகுதியில் ரூ.17 ஆயிரம் அபராதம் விதிக்கப்பட்டது. இந்த தகவலை திருப்பூர் மாவட்ட கலெக்டர் விஜய கார்த்திகேயன் தெரிவித்துள்ளார்.
Tags:    

Similar News