செய்திகள்
மகளின் வளைகாப்புக்காக வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலி
திருச்சி அருகே மகளின் வளைகாப்புக்காக வந்த போது மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்த பெண் பலியான சம்பவம் சோகத்தை ஏற்படுத்தி உள்ளது.
திருச்சி:
புதுச்சேரி மாநிலம் காரைக்கால் மாவட்டம் சூரக்குடி கிராமத்தை சேர்ந்தவர் ரவிச்சந்திரன். இவரது மனைவி மணிமேகலை (வயது 49). இவர்களின் மகள் சரண்யா (27). திருச்சி கல்லறைமேட்டுத்தெருவை சேர்ந்த கண்ணனுக்கு, சரண்யாவை திருமணம் செய்து கொடுத்திருந்தனர். இந்தநிலையில் தற்போது சரண்யா நிறைமாத கர்ப்பிணியாக உள்ளார். அவருக்கு வருகிற 20-ந்தேதி வளைகாப்பு நடத்தி, சொந்த ஊருக்கு அழைத்து செல்ல பெற்றோர் ஏற்பாடு செய்திருந்தனர். இதற்காக மணிமேகலை காரைக்காலில் இருந்து கும்பகோணம் வந்தார்.
பின்னர் அங்கிருந்து தனது மருமகன் கண்ணனின் மோட்டார் சைக்கிளில் திருச்சிக்கு வந்துகொண்டிருந்தார். கல்லணை மெயின்ரோட்டில் திருவளர்ச்சோலை அருகே வந்த போது, மணிமேகலை திடீரென மயங்கி மோட்டார் சைக்கிளில் இருந்து தவறி விழுந்தார். இதில் படுகாயம் அடைந்த அவரை அங்கிருந்தவர்கள் மீட்டு சிகிச்சைக்காக திருச்சியில் உள்ள தனியார் மருத்துவமனையில் சேர்த்தனர். பின்னர் அவர் மேல் சிகிச்சைக்காக காரைக்கால் அரசு ஆஸ்பத்திரியில் அனுமதிக்கப்பட்டார். அங்கு மணிமேகலை சிகிச்சை பலனின்றி பரிதாபமாக உயிரிழந்தார். இதுகுறித்து திருச்சி ஸ்ரீரங்கம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரணை நடத்தி வருகிறார்கள்.