செய்திகள்
கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேர் கைது
கும்மிடிப்பூண்டி அருகே திருட்டுத்தனமாக மது விற்ற 10 பேரை போலீசார் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
கும்மிடிப்பூண்டி:
கும்மிடிப்பூண்டி தாலுகாவில் பல்வேறு பகுதிகளில் திருட்டுத்தனமாக மது விற்பதாக தகவல் வந்ததன்பேரில் மாவட்ட மதுவிலக்கு துணை போலீஸ் சூப்பிரண்டு கல்பனாதத் உத்தரவின் பேரில் சப்-இன்ஸ்பெக்டர் புகழேந்தி தலைமையில் மது விலக்கு அமலாக்க பிரிவு போலீசார் கொண்டமாநல்லூர், புதுகும்மிடிப்பூண்டி, பண்பாக்கம் ஏரிக்கரை, புதுவாயல், சாணாப்புத்தூர் ஏரிக்கரை, நாகராஜகண்டிகை தரைபாலம், கவரைப்பேட்டை சத்யவேடு சாலை சந்திப்பு, பாதிரிவேடு ஏரிக்கரை மற்றும் தச்சூர் கூட்டுசாலை போன்ற பகுதிகளில் திடீர் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது மேற்கண்ட இடங்களில் திருட்டுத்தனமாக மது விற்பனையில் ஈடுபட்டதாக கொண்டமாநல்லூர் ரவி (வயது 28), கம்மார்பாளையம் ஜெகதீஸ்வரன் (32), குருதானமேடு கஜபதி (35), புதுவாயல் பச்சையப்பன் (57), சாணாப்புத்தூர் வெங்கடேசன் (36), சந்திரன்(48), பல்லவாடா சுரேஷ் (39), கனகம்பாக்கம் விஜி (22), பாதிரிவேடு திருப்பதி (49) மற்றும் சென்னை அயனாவரத்தை சேர்ந்த சிவகுமார் (39) ஆகியோரை மடக்கி பிடித்தனர்.
இதுகுறித்து கும்மிடிப்பூண்டி மதுவிலக்கு அமலாக்கப் பிரிவு போலீசார் வழக்குப்பதிவு செய்து மேற்கண்ட 10 பேரையும் கைது செய்தனர். அவர்களிடம் இருந்து விற்பனைக்காக பதுக்கி வைத்திருந்த 193 மதுபாட்டில்களையும் போலீசார் கைப்பற்றினர்.