செய்திகள்
கோஷ்டி மோதல்

திருமங்கலம் அருகே கோஷ்டி மோதல்- கல்வீச்சு

Published On 2020-09-07 09:50 GMT   |   Update On 2020-09-07 09:50 GMT
திருமங்கலம் அருகே கோஷ்டி மோதல் சம்பவம் குறித்து போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர்.

திருமங்கலம்:

மதுரை மாவட்டம் திருமங்கலம் அருகே உள்ளது சொக்கநாதன் பட்டி. இங்கு நேற்று இரவு ஒரு சமுதாயத்தைச் சேர்ந்த இளைஞர் இரு சக்கர வாகனத்தில் வேகமாகச் சென்றார். இதனை மற்றொரு சமுதாயத்தினர் கண்டித்துள்ளனர்.

இதனால் ஆத்திர மடைந்த இளைஞர் தங்களது சமுதாயத்தைச் சேர்ந்தவர்களிடம் தெரிவித்தார். இதுதொடர்பாக 2 சமுதாயத்தினர் கோஷ்டியாக மோதிக் கொண்டனர். இந்த சம்பவத்தின்போது கற்கள் வீசி தாக்கி கொண்டனர். இதில் அங்கு நின்ற ஒரு தரப்பினரின் கார் பக்கவாட்டு கண்ணாடி உடைந்தது. மேலும் எதிர் தரப்பைச் சேர்ந்த கோஷ்டியின் ஜே.சி.பி. வாகன கண்ணாடியும் உடைந்தது.

திருமங்கலம் போலீசார் உடனடியாக சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து மோதலை தடுத்து நிறுத்தினர். இதற்கிடையில் தகராறில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து தப்பி ஓடி விட்டனர்.

மோதல் தொடர்பாக பாலகிருஷ்ணன் என்பவர் கொடுத்த புகாரின் அடிப்படையில் ஒரு தரப்பை சேர்ந்த கணேசன், பிரகாஷ், விஷ்ணுகுமார், ராஜசேகரன், பிரகாஷ் உள்ளிட்ட 10-க்கும் மேற்பட்டோர் மீது வழக்குப் பதிவு செய்து செய்யப்பட்டுள்ளது.

இது தொடர்பாக டி.எஸ்.பி. வினோதினி சொக்கநாதன் பட்டி கிராமத்தில் நேரில் விசாரணை மேற்கொண்டார். இதையடுத்து அவரது உத்தரவின் பேரில் சொக்கநாதன்பட்டி கிராமத்தில் போலீசார் குவிக்கப்பட்டு பாதுகாப்பு பணியில் ஈடுபட்டு வருகின்றனர்.

Tags:    

Similar News