செய்திகள்
டி சர்ட்டில் தமிழ் வளராது- வானதி சீனிவாசன்
டி சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது என்று பாஜகவின் வானதி சீனிவாசன் கூறியுள்ளார்.
இந்தி தெரியாததால் டெல்லி விமான நிலையத்தில் அவமானப்படுத்தப்பட்டதாக இயக்குனர் வெற்றிமாறன் பேட்டி ஒன்றில் தெரிவித்தது தற்போது பரபரப்பாக பேசப்பட்டு வந்தது.
கடந்த 2011ம் ஆண்டு ஆகஸ்ட் மாதம் கனடா மான்ட்ரியல் திரைப்பட விழாவில் ஆடுகளம் படத்தை ஸ்கிரீன் செய்துவிட்டு இந்தியாவுக்கு திரும்பி வந்தபோது இந்த சம்பவம் நடந்ததாகவும் அவர் கூறியிருந்தார்.
இந்தி தெரியாத காரணத்தால் விமான நிலையத்தில் வெற்றிமாறன் அவமதிக்கப்பட்டது குறித்து அறிந்த ரசிகர்கள் அதிருப்தியும், கோபமும் அடைந்துள்ளனர். இந்தி எப்படி இந்த நாட்டின் தாய் மொழியாகும் என்று பலரும் கேள்வி எழுப்பியுள்ளனர். நடிகர்கள் பலர் இந்திக்கு எதிரான வாசகங்களுடன் கூடிய டி சர்ட் அணிந்து, இந்தி எதிர்ப்பை பதிவு செய்தனர்.
இந்தநிலையில் பாஜக நிர்வாகி வானதி சீனிவாசன் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்தார். அப்போது அவர் கூறுகையில், ‘டி சர்ட் மூலம் ஒருபோதும் தமிழை வளர்த்தெடுக்க முடியாது. மொழி திணிப்பு என்பதை பாஜகவும் எதிர்க்கிறது. அதேசமயம் மேலும் ஒரு மொழியை கற்க வேண்டும்’ என்றார்.