செய்திகள்
நகை திருட்டு

திருவெறும்பூர் அருகே, பூட்டை உடைத்து பெண் டாக்டர் வீட்டில் 15 பவுன் நகை திருட்டு

Published On 2020-09-01 01:36 GMT   |   Update On 2020-09-01 01:36 GMT
திருவெறும்பூர் அருகே, பெண் டாக்டர் வீட்டின் பூட்டை உடைத்து 15 பவுன் நகைகளை மர்ம நபர்கள் திருடிச்சென்றது குறித்து போலீசார் விசாரித்து வருகின்றனர்.
துவாக்குடி:

திருச்சி மாவட்டம் திருவெறும்பூர் அருகே உள்ள துவாக்குடி பெல் நகரை சேர்ந்தவர் சுமதி (வயது 45). இவர் தில்லைநகர் பகுதியில் உள்ள ஒரு மருந்து கடையில் வேலை பார்த்து வருகிறார். இவரது மகள் சுமிதா. இவர் திருச்சியில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் டாக்டராக வேலை பார்த்து வருகிறார்.

இந்த நிலையில் கடந்த மாதம் 29-ந் தேதி தஞ்சையில் நடைபெற்ற உறவினரின் திருமண நிகழ்ச்சிக்கு சுமதியும், சுமிதாவும் சென்றனர். பின்னர் நேற்று முன்தினம் இரவு அவர்கள் வீட்டிற்கு திரும்பி வந்தனர். அப்போது வீட்டு கதவின் பூட்டு உடைக்கப்பட்டு இருந்ததை கண்டு இருவரும் அதிர்ச்சியடைந்தனர்.

இதுகுறித்து சுமதி, துவாக்குடி போலீஸ் நிலையத்தில் புகார் அளித்தார். அதன்பேரில் துவாக்குடி போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து சென்று பார்வையிட்டனர். அப்போது, மர்ம நபர்கள் வீட்டின் பூட்டை உடைத்து, வீட்டிற்குள் புகுந்து பீரோவின் பூட்டை உடைத்து, அதில் இருந்த 15 பவுன் நகைகளை திருடிச்சென்றது தெரியவந்தது.

சம்பவ இடத்திற்கு கைரேகை நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு, திருட்டு நடந்த வீட்டில் பதிவாகியிருந்த கைரேகைகளை சேகரித்தனர். மேலும் இந்த சம்பவம் குறித்து துவாக்குடி போலீசார் வழக்குப்பதிவு செய்து மர்மநபர்களை வலைவீசி தேடி வருகின்றனர். துவாக்குடி பகுதியில் கடந்த ஒரு வாரத்திற்குள்ளாக 2 திருட்டு சம்பவங்கள் நடந்துள்ளது அப்பகுதியில் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News