செய்திகள்
கோப்பு படம்.

கும்பகோணம் அருகே அரசலாற்றில் குளிக்க சென்ற மருத்துவ மாணவர் நீரில் மூழ்கி பலி

Published On 2020-08-30 08:09 GMT   |   Update On 2020-08-30 08:09 GMT
கும்பகோணம் அருகே ஆற்றில் மூழ்கி மருத்துவ கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் அந்த பகுதியில் பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.

கும்பகோணம்:

கும்பகோணம் அருகே அம்மாபேட்டை வள்ளுவர் தெருவை சேர்ந்தவர் சிவக்குமார் (வயது55). இவர் கும்பகோணம் அரசு போக்குவரத்து கழக அலுவலகத்தில் வேலை பார்த்து வருகிறார். இவருடைய மகன் பூவரசன்(21). சீனாவில் உள்ள ஒரு மருத்துவ கல்லூரியில் படித்து வந்த பூவரசன் கொரோனா பரவல் காரணமாக கடந்த சில மாதங்களுக்கு முன்பு சீனாவில் இருந்து தனது சொந்த ஊருக்கு வந்தார்.

நேற்று இரவு 7 மணி அளவில் தனது வீட்டின் அருகே உள்ள அரசலாற்றுக்கு பூவரசன் குளிக்க சென்றார்.

அப்போது ஆற்றின் சுழலில் சிக்கிய பூவரசன் தண்ணீரில் மூழ்கினார். இதனால் அருகில் இருந்தவர்கள் அவரை காப்பாற்ற முயன்றனர். ஆனால் பூவரசனை மீட்க முடியவில்லை. இதுபற்றி சிவக்குமார் கும்பகோணம் தாலுகா போலீசில் கொடுத்த புகாரின் பேரில் இன்ஸ்பெக்டர் கார்த்திகேயன், சப்-இன்ஸ் பெக்டர் மோகன் மற்றும் கும்பகோணம் தீயணைப்பு நிலைய வீரர்கள் சம்பவ இடத்துக்கு சென்று பூவரசனை தேடினர். ஆனால் அவரை கண்டுபிடிக்க முடியவில்லை. இதையடுத்து இன்று காலையும் அவரை தேடும் பணி தீவிரமாக நடைபெற்றது. அப்போது அரசலாற்றில் ஒரு புதரில் பூவரசன் உடலை கைப்பற்றினர். பின்னர் அரசு மருத்துவமனைக்கு பிரேத பரிசோதனைக்கு அனுப்பினர்.

ஆற்றில் மூழ்கி மருத்துவ கல்லூரி மாணவர் இறந்த சம்பவம் பெரும் சோகத்தை ஏற்படுத்தியது.

Tags:    

Similar News