செய்திகள்
பூங்கொடி- சரண்

கரூரில் தாய்-மகன் தூக்குப்போட்டு தற்கொலை

Published On 2020-08-26 11:14 GMT   |   Update On 2020-08-26 11:14 GMT
கரூரில், தாய்-மகன் தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். இச்சம்பவம் அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
கரூர்:

கரூர் வெங்கமேடு நேதாஜிநகர் பகுதியை சேர்ந்தவர் ஞானசேகரன். தையல் தொழிலாளி. இவரது மனைவி பூங்கொடி(வயது 45). இவர்களுக்கு மனோஜ்(25), சரண்(23) ஆகிய இரு மகன்கள். அவர்களில், சரண் கரூரில் உள்ள தனியார் கல்லூரி ஒன்றில் எம்.எஸ்சி 2-ம் ஆண்டு படித்து வந்தார். மனோஜ், தந்தையின் கடையில் வேலை பார்த்து வருகிறார். பூங்கொடிக்கும், சரணுக்கும் அடிக்கடி உடல்நலக்குறைவு ஏற்படும் என்று கூறப்படுகிறது. ஞானசேகரனும், மனோஜூம் நேற்று வழக்கம்போல வேலைக்கு சென்று விட்டனர்.

இந்தநிலையில் பூங்கொடியும், சரணும் வீட்டில் தனித்தனியாக தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டனர். அவர்களது வீட்டு கதவு நீண்டநேரம் திறக்கப்படாததால் சந்தேகம் அடைந்த அக்கம், பக்கத்தினர் ஜன்னல் வழியாக எட்டிப் பார்த்தனர். அப்போது தாயும், மகனும் தூக்கில் பிணமாக தொங்கியது கண்டு அதிர்ச்சி அடைந்தனர்.

இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அதன்பேரில், வெங்கமேடு போலீசார் சம்பவ இடத்திற்கு விரைந்து வந்து உடல்களை மீட்டு பிரேத பரிசோதனைக்காக கரூர் மருத்துவக்கல்லூரி மருத்துவமனைக்கு அனுப்பி வைத்தனர். மேலும், இதுகுறித்து போலீசார் வழக்குப்பதிவு செய்து, உடல்நலக்குறைவு காரணமாக அவர்கள் இருவரும் தற்கொலை செய்து கொண்டார்களா? அல்லது குடும்ப பிரச்சனை காரணமாக உயிரை மாய்த்துக் கொண்டார்களா? என்பன உள்பட பல்வேறு கோணங்களில் விசாரணை நடத்தி வருகின்றனர்.

தாயும், மகனும் ஒரே நேரத்தில் தற்கொலை செய்து கொண்டது, அப்பகுதி மக்களிடையே பெரும் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.
Tags:    

Similar News