செய்திகள்
சாலை மறியல்

சேலம் சூரமங்கலத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியல்

Published On 2020-08-21 14:32 GMT   |   Update On 2020-08-21 14:32 GMT
சேலம் சூரமங்கலத்தில் அடிப்படை வசதிகள் கேட்டு பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்டனர்.
சேலம்:

சேலம் மாநகராட்சி சூரமங்கலம் மண்டலத்திற்கு உட்பட்ட 1-வது வார்டில் அவ்வை நகர் உள்ளது. இந்த பகுதியில் சுமார் ஆயிரத்துக்கும் மேற்பட்ட குடும்பத்தினர் வசித்து வருகின்றனர். ஆனால் சாலை, கழிவுநீர் கால்வாய், தண்ணீர், சுகாதாரம், தெருவிளக்கு உள்ளிட்ட அடிப்படை வசதிகள் செய்து தரப்படாமல் உள்ளதால் பல ஆண்டுகளாக பொதுமக்கள் கடும் சிரமத்திற்கு ஆளாகி வருகின்றனர்.

இது தொடர்பாக மாநகராட்சி அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் எவ்வித நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என்று கூறப்படுகிறது. இந்நிலையில், அவ்வை நகர் பகுதியில் வசிக்கும் பொதுமக்கள் நேற்று காலை தங்கள் பகுதிக்கு அடிப்படை வசதிகள் செய்து தர வேண்டும் என வலியுறுத்தி திடீரென சாலை மறியலில் ஈடுபட்டனர். இதனால் அப்பகுதியில் பரபரப்பு நிலவியது.

இது குறித்து தகவலறிந்த சூரமங்கலம் போலீசார் மற்றும் சூரமங்கலம் மண்டல அதிகாரிகளும் சம்பவ இடத்திற்கு வந்து மறியலில் ஈடுபட்டவர்களிடம் பேச்சுவார்த்தை நடத்தினர். அப்போது கடந்த பல ஆண்டுகளாக இப்பகுதியில் அடிப்படை வசதிகள் எதுவும் செய்து தரப்படவில்லை. இது சம்பந்தமாக அதிகாரிகளிடம் மனு கொடுத்தும் அதன்மீது நடவடிக்கை எடுக்காததால் போராட்டத்தில் ஈடுபட்டதாகவும், எனவே அடிப்படை வசதிகளை செய்து தர வேண்டும் என பொதுமக்கள் கோரிக்கை விடுத்தனர்.

இதைத்தொடர்ந்து அவ்வை நகர் பகுதியில் அடிப்படை வசதிகள் செய்துதர உரிய நடவடிக்கை எடுப்பதாக அதிகாரிகள் உறுதி அளித்தனர். இதன் பேரில் போராட்டத்தில் ஈடுபட்டவர்கள் அங்கிருந்து கலைந்து சென்றனர்.
Tags:    

Similar News