செய்திகள்
உணவு தானியங்களை இலவசமாக வழங்க கோரி ஆர்ப்பாட்டம்
பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம் நடந்தது.
பெரம்பலூர்:
பெரம்பலூர் மாவட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியின் சி.ஐ.டி.யு. தொழிற்சங்கம், அகில இந்திய விவசாயிகள் சங்கம், அகில இந்திய விவசாயிகள் தொழிலாளர்கள் சங்கம் ஆகியவற்றின் சார்பில் கண்டன ஆர்ப்பாட்டம், பெரம்பலூர் நகராட்சி அலுவலகம் முன்பு நடந்தது. ஆர்ப்பாட்டத்திற்கு சி.ஐ.டி.யு. தொழிற்சங்கத்தின் மாவட்ட தலைவர் அகஸ்டின் தலைமை தாங்கினார். அகில இந்திய விவசாயிகள் சங்கத்தின் மாவட்ட செயலாளர் செல்லத்துரை, அகில இந்திய விவசாய தொழிலாளர்கள் சங்கத்தின் ஒன்றிய பொறுப்பாளர் சீனிவாசன் ஆகியோர் முன்னிலை வகித்தனர். ஆர்ப்பாட்டத்தில் கலந்து கொண்டவர்கள், அனைவருக்கும் சுகாதார பாதுகாப்பை மத்திய அரசு உறுதிப்படுத்த வேண்டும். நபர் ஒருவருக்கு 10 கிலோ உணவு தானியங்களை 6 மாதங்களுக்கு மத்திய அரசு இலவசமாக வழங்க வேண்டும் என்பன உள்ளிட்ட கோரிக்கைகளை வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினர். இதில் விவசாயிகள், தொழிலாளர்கள், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்டு கட்சியினர் மற்றும் தோழமை கட்சியினர் உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.