செய்திகள்
கெலமங்கலத்தில் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டம்
கெலமங்கலத்தில் பல்வேறு கோரிக்கைகளை வலியுறுத்தி தமிழ்நாடு அரசு ஊழியர் சங்கத்தினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
ராயக்கோட்டை:
தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க தேன்கனிக்கோட்டை வட்ட மையம் சார்பில் கெலமங்கலம் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன், சத்துணவு ஊழியர்களுக்கு ஆதரவாக நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது. மாவட்ட இணை செயலாளர் கல்யாணசுந்தரம் கோரிக்கை குறித்து விளக்கி பேசினார். ஆர்ப்பாட்டத்தில் தமிழ்நாடு சத்துணவு ஊழியர் சங்கம் சார்பில், கடந்த மாதம், 7-ந் தேதி தமிழக முதல்-அமைச்சர் கவனத்தை ஈர்க்கும் வகையில் ஆர்ப்பாட்டம் நடத்தப்பட்டது.
ஆனால், ஆர்ப்பாட்டத்தில் பங்கேற்ற சத்துணவு ஊழியர்களை சம்பளத்தை பிடித்தம் செய்ய உத்தரவிடப்பட்டுள்ளது. இதை திரும்ப பெற வலியுறுத்தி கோஷங்களை எழுப்பினார்கள். சத்துணவு ஊழியர் சங்க நிர்வாகி திருநாவுக்கரசு உள்பட பலர் கலந்து கொண்டனர். முடிவில் மாவட்ட பொருளாளர் தேவராஜ் நன்றி கூறினார். அதே போல் ஓசூர் வட்டார வளர்ச்சி அலுவலகம் முன் தமிழ்நாடு அரசு ஊழியர் சங்க ஓசூர் வட்ட கிளை சார்பில் நேற்று ஆர்ப்பாட்டம் நடந்தது.