செய்திகள்
கலெக்டர் ராமன்

பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம்- கலெக்டர் எச்சரிக்கை

Published On 2020-07-28 09:53 GMT   |   Update On 2020-07-28 09:53 GMT
சேலம் மாவட்டத்தில் பொது இடங்களில் எச்சில் துப்பினால் ரூ.500 அபராதம் விதிக்கப்படும் என்று கலெக்டர் ராமன் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
சேலம்:

சேலம் மாவட்ட கலெக்டர் ராமன் விடுத்துள்ள செய்திக்குறிப்பில் கூறப்பட்டுள்ளதாவது:-

சேலம் மாவட்டத்தில் கொரோனா வைரஸ் பரவுவதை தடுக்க பல்வேறு நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. முககவசம் அணிவதையும், சமூக இடைவெளியை பின்பற்றுவதையும், அடிக்கடி சோப்பு கொண்டு கைகளை சுத்தமாக கழுவுவதையும் பொதுமக்கள் கடைபிடிக்க வேண்டுமென விழிப்புணர்வு ஏற்படுத்தப்பட்டு வருகின்றது.

மேலும், எச்சில், இருமல், தும்மலில் ஏற்படும் நீர் துவாளைகள் மூலம் கொரோனா வைரஸ் நோய் தொற்று அதிகம் பரவ வாய்ப்பு உள்ளதாக மருத்துவ வல்லுனர்கள் தெரிவித்துள்ளனர். எனவே, பொதுமக்கள் பொது இடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலும் தவிர்த்திட வேண்டும்.

இதன்படி சேலம் மாவட்டத்தில் உள்ள மாநகராட்சி, 4 நகராட்சிகள், 33 பேரூராட்சிகள், 20 ஊராட்சி ஒன்றியங்களுக்குட்பட்ட 385 கிராம ஊராட்சிகள் உள்ளிட்ட அனைத்து பகுதிகளிலும் பொதுஇடங்களில் எச்சில் துப்புவதை முற்றிலும் தவிர்க்க வேண்டும். ஏற்கனவே, முககவசம் அணியாதவர்களுக்கு அபராதம் விதிக்கப்பட்டு வரும் நிலையில், தற்போது பொதுஇடங்களில் எச்சில் துப்புபவர்கள் கண்டறியப்பட்டால் அவர்களுக்கு, மாநகராட்சி, நகராட்சி, பேரூராட்சி, ஊராட்சி அலுவலர்கள் மூலம் ரூ.500 அபராதம் விதிக்கப்படும். பொதுமக்கள் அனைவரும் இந்நோய் தடுப்பு பாதுகாப்பு முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளுக்கு முழு ஒத்துழைப்பு அளித்திட வேண்டும்.

இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.

Tags:    

Similar News