செய்திகள்
கமுதி அருகே நடைபெற்ற மீன்பிடி திருவிழாவில் 20 பேர் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். பின்னர் அவற்றை பொதுமக்கள் பகிர்ந்து கொண்டனர்.
கமுதி:
கமுதி அருகே பேரையூர் மேட்டுப்பட்டி ஊருணியில் ஒவ்வொரு ஆண்டும் மீன்பிடி திருவிழா விமரிசையாக நடைபெறுவது வழக்கம். இந்த நிலையில் கொரோனா வைரஸ் பரவல் காரணமாக மீன்பிடி திருவிழாவுக்கு தடை விதிக்கப்பட்டது. இதையடுத்து பொதுமக்கள் கோரிக்கை விடுத்ததன் பேரில் பரமக்குடி ஆர்.டி.ஓ. தங்கவேல் உத்தரவின் பேரில் கமுதி தாசில்தார் செண்பகலதா தலைமையில் பேச்சுவார்த்தை நடைபெற்றது.
இதில் கிராம பொதுமக்கள், வருவாய்த்துறையினர், போலீசார் கலந்துகொண்டனர். பேச்சுவார்த்தையில் ஊருணியில் 20 பேர் மட்டுமே மீன்பிடிக்க வேண்டும் என்றும், பிடிபடும் மீன்களை கிராம மக்கள் பங்கிட்டுக்கொள்வது எனவும் முடிவு செய்யப்பட்டது. அதனை தொடர்ந்து மேட்டுப்பட்டி ஊருணியில் மீன்பிடி திருவிழா நடைபெற்றது. இதில் 20 பேர் கலந்து கொண்டு மீன்களை பிடித்தனர். பின்னர் அவற்றை பொதுமக்கள் பகிர்ந்து கொண்டனர்.