செய்திகள்
கொரோனா காலத்தில் ஆசிரியர்களின் சேவை தேவை- உயர்நீதிமன்றம்
கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி தாக்கல் செய்யப்பட்ட மனுவை உயர்நீதிமன்றம் தள்ளுபடி செய்தது.
சென்னை:
கொரோனா தடுப்பு பணியில் மாநகராட்சி பள்ளி ஆசிரியர்களை ஈடுபடுத்துவதற்கு தடை விதிக்கக் கோரி உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனு இன்று விசாரணைக்கு வந்தது.
அப்போது, ஆசிரியர்கள் ஒருங்கிணைப்பு பணியை மட்டுமே மேற்கொள்வார்கள் எனறும் களத்திற்கு அனுப்பப்படுவதில்லை என்றும் அரசு தரப்பில் தெரிவிக்கப்பட்டது.
இதையடுத்து கருத்து தெரிவித்த நீதிபதிகள், கொரோனா போன்ற பேரிடர் காலத்தில் ஆசிரியர்களின் சேவையை எதிர்பார்ப்பதாக கூறி, உயர்நிலை, மேல்நிலைப் பள்ளி பட்டதாரி ஆசிரியர்கள் சங்கம் சார்பில் தாக்கல் செய்த மனுவை தள்ளுபடி செய்தனர்.
ஆசிரியர்கள் என்பவர்கள் இயற்கையாகவே தலைமைப் பொறுப்பு கொண்டவர்கள். பேரிடர் காலங்களில் மற்றவர்களுக்கு முன்னுதாரணமாக ஆசிரியர்கள் இருக்க வேண்டும். கொரோனா தடுப்பு பணியில் ஆசிரியர்களுக்கு போதிய பாதுகாப்பை அரசு உறுதி செய்ய வேண்டும் என்றும் உயர்நீதிமன்றம் உத்தரவிட்டது.