செய்திகள்
கிருஷ்ணகிரி அருகே விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி
கிருஷ்ணகிரி அருகே போலீஸ் நிலையத்தில் விசாரணைக்கு அழைத்து செல்லப்பட்டவர் கழுத்தை அறுத்து தற்கொலை முயற்சி செய்த பெரும் பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
கிருஷ்ணகிரி:
கிருஷ்ணகிரி மாவட்டம் அஞ்செட்டியில் ஒகேனக்கல் சாலையில் அரசு மதுபான கடை உள்ளது. இதன் மேற்பார்வையாளராக தர்மபுரி மாவட்டம் பொங்கவேம்பு கிராமத்தை சேர்ந்த அசோகன் (வயது 52) என்பவர் இருந்து வருகிறார்.
கடந்த 24-ந் தேதி காலை அவர் கடையை திறக்க சென்றுள்ளார். அப்போது கடையின் பூட்டு உடைக்கப்பட்டிருந்தது. கடையில் 16 அட்டை பெட்டிகளில் இருந்த 750 மது பாட்டில்கள் திருடப்பட்டிருந்தது தெரியவந்தது. அதன் மதிப்பு ரூ.1 லட்சத்து 13 ஆயிரத்து 160 ஆகும். இந்த நிலையில் நேற்று முன்தினம் டாஸ்மாக் கடை முன்பு 13 மது பாட்டில்கள் அடங்கிய அட்டை பெட்டிகளை மர்ம நபர்கள் வைத்து சென்றிருந்தனர். இதுகுறித்து தகவலறிந்த அஞ்செட்டி போலீசார் விசாரணை நடத்தினார்கள்.
இந்த டாஸ்மாக் கடை அருகில் அஞ்செட்டி மாரியம்மன் கோவில் தெருவை சேர்ந்த புட்டப்பா என்பவரின் மகன் ஸ்ரீராமன்(48) என்பவர் பெட்டிக்கடை வைத்துள்ளார். மது பாட்டில்கள் வைத்து சென்றவர்கள் குறித்து ஸ்ரீராமனுக்கு தெரியும் என சந்தேகித்த போலீசார், அவரை விசாரணைக்காக நேற்று அழைத்து சென்றனர்.
கணவனை விசாரணைக்கு அழைத்து சென்றதை அறிந்த அவரது மனைவி சரளா போலீஸ் நிலையம் சென்றார். அப்போது போலீசார், சரளாவை பேச விடாமல் தடுத்ததாக கூறப்படுகிறது. அந்த நேரம் போலீஸ் நிலையத்தில் அமர்ந்திருந்த ஸ்ரீராமன், அங்குள்ள மேஜையில் இருந்த கத்தியை எடுத்து தனது கழுத்தை அறுத்து தற்கொலைக்கு முயன்றார். உடனடியாக அவரை தேன்கனிக்கோட்டை அரசு ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அங்கு அவருக்கு கழுத்தில் 7 தையல்கள் போடப்பட்டன.