செய்திகள்
உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மனு அளிக்க வந்த காட்சி

சார்ஜாவில் தொழிலாளி தற்கொலை: உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர கோரி கலெக்டர் அலுவலகத்தில் மனைவி மனு

Published On 2020-07-09 10:11 GMT   |   Update On 2020-07-09 10:11 GMT
சார்ஜாவில் தற்கொலை செய்து கொண்ட தொழிலாளியின் உடலை சொந்த ஊருக்கு கொண்டு வர நடவடிக்கை எடுக்கக் கோரி அவரது மனைவி கலெக்டர் அலுவலகத்தில் மனு கொடுத்தார்.
பெரம்பலூர்: 

பெரம்பலூர் மாவட்டம் ஆலத்தூர் தாலுகா அணைப்பாடி கிராமத்தை சேர்ந்தவர் முத்தமிழ்ச் செல்வன் (வயது 38). இவருக்கு திருமணமாகி மனைவி கவிதா(29) என்கிற மனைவியும், யோசிகா(9) என்கிற மகளும், அபிஷேக்(7) என்கிற மகனும் உள்ளனர். முத்தமிழ்ச்செல்வன் கடந்த 5 ஆண்டுகளாக ஐக்கிய அரபு குடியரசு நாட்டில் உள்ள சார்ஜா மகாணத்தில் உள்ள தனியார் நிறுவனத்தில் தொழிலாளியாக வேலை பார்த்து வந்தார். முத்தமிழ்ச்செல்வன் கடந்த 1½ ஆண்டுகளுக்கு முன்பு சொந்த ஊருக்கு வந்து விட்டு, மீண்டும் சார்ஜாவுக்கு திரும்பினார். இந்நிலையில் வேலை பார்க்கும் இடத்தில் முத்தமிழ்ச்செல்வ னுக்கு ஏதோ பிரச்சினை ஏற்பட்டதாம், இத னால் மனமுடைந்த அவர் கடந்த 3-ந்தேதி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

கணவர் தற்கொலை செய்து கொண்ட சம்பவம் குறித்து தனியார் நிறுவனம் மூலம் மனைவி கவிதாவுக்கு தகவல் தெரியவந்தது. அதனை தொடர்ந்து தற்போது கொரோனா ஊரடங்கு நடைமுறையில் உள்ளதால் வெளிநாட்டில் இறந்த தனது கணவரின் உடலை மீட்டு, சொந்த ஊருக்கு கொண்டு வருவதற்கு கலெக்டர் நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று கவிதா கண்ணீர் மல்க நேற்று தனது 2 குழந்தைகளுடன் கலெக்டர் அலுவலகத்துக்கு வந்து அதிகாரியை சந்தித்து மனு கொடுத்து விட்டு சென்றார்.
Tags:    

Similar News