செய்திகள்
வங்கியில் பணம் எடுக்க சமூக விலகலை பின்பற்றாமல் குவிந்த வாடிக்கையாளர்கள்
தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டி வங்கியில் பணம் எடுக்க சமூக விலகலை பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் குவிந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.
காரிமங்கலம்:
தர்மபுரி மாவட்டம் பெரியாம்பட்டியில் தேசியமயமாக்கப்பட்ட வங்கி உள்ளது. இந்த வங்கியில் பணம் எடுக்க ஆண்களும் பெண்களும் குவிந்தனர். அப்போது வங்கி நிர்வாகம் வங்கியை பூட்டி வைத்து, பணம் எடுக்க ஒவ்வொரு வாடிக்கையாளராகத்தான் உள்ளே விட முடியும் என்று தெரிவித்தது.
ஆனால் பணம் எடுப்பதற்காக பொதுமக்கள் முண்டியடித்து கொண்டு சமூக விலகலை மறந்து சென்றதால் தள்ளுமுள்ளு ஏற்பட்டது. கொரோனா வைரஸ் நோய் தடுப்பு நடவடிக்கையின் ஒன்றாக சமூக இடைவெளியை கடைபிடிக்க மத்திய, மாநில அரசுகள் தொடர்ந்து வலியுறுத்தி வருகின்றன.
இந்தநிலையில் சமூக விலகலை பின்பற்றாமல் வாடிக்கையாளர்கள் திரண்டதால் பரபரப்பு ஏற்பட்டது.