செய்திகள்
மதுரை ஐகோர்ட்

சாத்தான்குளம் தொழிலாளி மரண வழக்கு- டிஜிபி, உள்துறை செயலருக்கு நோட்டீஸ்

Published On 2020-07-08 08:16 GMT   |   Update On 2020-07-08 08:16 GMT
சாத்தான்குளம் காவல்துறையினர் தாக்குதலில் வாலிபர் இறந்ததாக தொடர்ந்த வழக்கில் டிஜிபி, உள்துறை செயலருக்கு உயர்நீதிமன்ற மதுரை கிளை நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்தவர், வடிவு. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருந்ததாவது:-

மே 18-ந்தேதி ஜெயக்குமார் என்பவர் உயிரிழந்தது தொடர்பாக எஸ்.ஐ.ரகுகணேஷ், தனது மூத்த மகன் துரையைத் தேடி சந்தேகத்தின் பேரில் விசாரிக்க வந்ததாக குறிப்பிட்டார். அப்போது துரை வீட்டில் இல்லாததால் இளைய மகன் மகேந்திரனை அழைத்துச் சென்றனர்.

அதன் பின்னர், காவல் ஆய்வாளர் ஸ்ரீதர் மற்றும் உதவி ஆய்வாளர் எஸ்.ஐ.ரகுகணேஷ் ஆகியோர் மகேந்திரனை போலீசார் கடுமையாக தாக்கினர்.

மறுநாள், இதுகுறித்து யாரிடமும் புகார் செய்யக்கூடாது என மிரட்டி அவரை விடுவித்துள்ளனர். போலீசார் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு மகேந்திரனை பரிசோதித்த டாக்டர்கள், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தான்.

எனது மகன் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்கிறது. அதுபோல எனது மகனின் இறப்புக்கு காரணமான போலீசார் மீதும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். எனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறியிருந்தார்.

இந்த மனுவை விசாரணைக்கு எடுத்த மதுரை ஐகோர்ட்டு நீதிபதிகள், தமிழக அரசின் உள்துறை செயலாளர், டி.ஜி.பி. தூத்துக்குடி எஸ்.பி., காவல் ஆய்வாளர் ஸ்ரீதர், உதவி ஆய்வாளர் ரகு கணேஷ் ஆகியோர் பதில் அளிக்க உத்தரவிட்டனர்.

Tags:    

Similar News