செய்திகள்
ஐகோர்ட் மதுரை கிளை

சாத்தான்குளம் போலீசார் மீது மதுரை ஐகோர்ட்டில் புதிய வழக்கு

Published On 2020-07-08 07:28 GMT   |   Update On 2020-07-08 08:03 GMT
சாத்தான்குளம் போலீசார் தாக்கியதால்தான் வாலிபர் மகேந்திரன் இறந்ததாக அவரது தாயார் மதுரை ஐகோர்ட்டில் புதிதாக வழக்கு தொடர்ந்துள்ளார். இந்த வழக்கு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
மதுரை:

தூத்துக்குடி மாவட்டம் ஆசீர்வாதபுரத்தை சேர்ந்தவர், வடிவு. இவர் மதுரை ஐகோர்ட்டில் தாக்கல் செய்த மனுவில் கூறியிருப்பதாவது:-

என்னுடைய மகன்கள் துரை, மகேந்திரன் (வயது 28) ஆகியோர் பாப்பான்குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டில் தங்கி வேலைக்கு சென்றனர். இந்தநிலையில் கடந்த மே மாதம் 18-ந்தேதி தெற்கு பைகுளம் அருகே ஜெயக்குமார் என்பவர் மர்ம கும்பலால் கொலை செய்யப்பட்டார். இந்த சம்பவம் தொடர்பாக 9 பேர் மீது சாத்தான்குளம் போலீசார் வழக்கு பதிவு செய்தனர். இது தொடர்பாக விசாரிப்பதற்காக எனது மூத்த மகனை தேடி என் வீட்டுக்கு சப்-இன்ஸ்பெக்டர் ரகுகணேஷ் உள்பட போலீசார் வந்தனர். பின்னர் பாப்பான்குளத்தில் உள்ள எனது சகோதரி வீட்டுக்கு சென்றுள்ளனர்.

அப்போது எனது மூத்த மகன் துரை வீட்டில் இல்லாததால், அங்கிருந்த மகேந்திரனை போலீஸ் நிலையத்துக்கு வலுக்கட்டாயமாக இழுத்து சென்றனர். அங்கு மகேந்திரனை போலீசார் கடுமையாக தாக்கினர்.

மறுநாள், இதுகுறித்து யாரிடமும் புகார் செய்யக்கூடாது என மிரட்டி அவரை விடுவித்துள்ளனர். போலீசார் தாக்கியதில் மகேந்திரனுக்கு தலையில் பலத்த காயம் ஏற்பட்டது. சில நாட்களுக்கு பிறகு தூத்துக்குடி அரசு ஆஸ்பத்திரியில் சேர்க்கப்பட்டான். அங்கு மகேந்திரனை பரிசோதித்த டாக்டர்கள், அவரின் தலையில் பலத்த காயம் ஏற்பட்டுள்ளதாகவும், மூளையில் ரத்தம் உறைந்துள்ளதாகவும் தெரிவித்தனர். பின்னர் சிகிச்சை பலனின்றி மகேந்திரன் உயிரிழந்தான்.

எனது மகன் போலீசாரால் தாக்கப்பட்டு இறந்தது குறித்து தூத்துக்குடி மாவட்ட கலெக்டர், போலீஸ் சூப்பிரண்டு ஆகியோரிடம் புகார் அளித்தேன். ஆனால் போலீசார் மீது எவ்வித நடவடிக்கையும் இல்லை. சாத்தான்குளம் தந்தை-மகன் இறப்பை மதுரை ஐகோர்ட்டு தாமாக முன்வந்து விசாரிக்கிறது. அதுபோல எனது மகனின் இறப்புக்கு காரணமான போலீசார் மீதும் உரிய விசாரணை நடத்த உத்தரவிட வேண்டும். எனக்கும் பாதுகாப்பு வழங்க வேண்டும்.

இவ்வாறு மனுவில் கூறப்பட்டுள்ளது.

இந்த மனு விரைவில் விசாரணைக்கு வருகிறது.
Tags:    

Similar News